Sunday, October 10, 2010

ஸ்ரீராமருக்கே ஜெயம்!

http://www.luckylookonline.com/2010/10/blog-post.html
ஸ்ரீராமருக்கே ஜெயம்!
October 4, 2010

இராமர் பாலம் கட்டப்பட்டபோது எடுத்த வண்ணப்படம். அணில் அப்போது வேலையில் பிஸியாக இருந்ததால் படத்தில் இல்லை.
உலகம் போற்றும் உத்தம பாரதம் புண்ணியபூமிதான் என்பதை மீண்டுமொரு முறை அலகாபாத் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பின் வாயிலாக உறுதி செய்திருக்கிறது. மாட்சிமை பொருந்திய இந்த உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு மூன்றில் இரண்டு பங்கு நியாயமான தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. தீர்ப்பு வழங்கிய இருவரில் தரம்வீர் ஷர்மா மற்றும் சுதிர் அகர்வால் இருவரும் புண்ணிய மதத்தைச் சார்ந்தவர்கள். மீதியிருக்கும் ஒருவரான சிக்பத் உல்லா கான் மட்டும் முல்லா மதத்தைச் சார்ந்தவர். நாட்டை ஆளும் அண்டோமேனியாவின் மிஷினரி மதத்தைச் சார்ந்தவர் யாரும் இந்த குழுவில் இல்லை என்பதே ஹிந்துக்களுக்கு ஆறுதலான ஒரு விஷயம்.
ஷர்மா மற்றும் அகர்வால் இருவரும் ஸ்ரீராமரின் பிறப்பை உறுதி செய்திருக்கிறார்கள். அயோத்தியில் பாபரால் கட்டப்பட்ட கட்டடத்தின் முக்கியமான பகுதியில்தான் தசரதபிரானின் அரண்மனை இருந்ததாகவும், குறிப்பாக மசூதியின் முக்கியமான கோபுர மாடம் இருந்தப் பகுதியில்தான் ஸ்ரீராமர் அவதரித்ததாகவும் தங்களது தீர்ப்பில் உறுதியாக சொல்லியிருக்கிறார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் ஹிந்து மாநிலம், உலகுக்கு தத்து தந்திருக்கும் உலகப்புகழ் தங்கத்தாரகை வழக்கம்போல தீர்ப்பினை வரவேற்று ஹிந்து மக்களின் வயிற்றில் பால்வார்த்திருக்கிறார். அகிலம் காக்கும் அம்மா கரசேவைக்கு செங்கல் அனுப்பி வைத்தவர் ஆயிற்றே? அவரிடமிருந்து மாற்று விமர்சனம் வந்திருந்தால்தான் நாம் ஆச்சரியம் கொள்ள ஏதுவாக அமைந்திருக்கும். ஸ்ரீமான் அத்வானி, ஸ்ரீமான் நரேந்திரமோடி வரிசையில் ஹிந்துஸ்தானத்தின் ஹிந்துமக்களுக்கு அபிமான தலைவராக புரட்சித்தலைவி தங்கத்தாரகை அவர்கள்தான் விளங்குகிறார் என்பது மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
அம்மாவின் அறிவுப்பூர்வமான அறிக்கை விடுத்திருக்கும் விளைவு தமிழ் ஹிந்துச்சூழலில் மிக முக்கியமானது. முன்னாள் திம்மிக்களாக விளங்கிய ஸ்ரீமான் கோபாலசாமி, ஸ்ரீமான் நெடுமாறன் ஆகியோர் இத்தீர்ப்பு குறித்து கிஞ்சித்தும் வாய்திறந்துவிட முடியாதபடி புரட்சித்தலைவியின் அறிக்கை அவர்களது வாயை திருநூல் கொண்டு கட்டிப்போட்டிருக்கிறது. உளறலுக்குப் பெயர்போன கம்யூனிஸ்டுகளும் கூட அம்மாவின் புண்ணியக் கட்டுப்பாட்டில் இருப்பதால் வழக்கமான உளறலை உளறித்தள்ளாமல் வாய்மூடி மவுனிகளாக மாறினார்கள். நம்மூர் தேசியத் திராவிட திம்மிக்கும் வேறு வழியில்லை, தீர்ப்பை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
"ஸ்ரீராமர் எந்த கல்லூரியில் பொறியியல் படித்தார்?" என்று முன்பு எள்ளிநகையாடிய மூத்த திராவிடத் திம்மி இப்போது எங்கேபோய் தன் முகத்தை வைத்துக் கொள்ளப் போகிறார் என்பதுதான் இப்போது ஹிந்துமக்கள் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் இன்றியமையாத கேள்வியாக இருக்கிறது. மாட்சிமை பொருந்திய நீதிபதிகளே ஸ்ரீராமர் பதினேழு இலட்சத்து இருபத்தி எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அயோத்தியில் அவதரித்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அனேகமாக அவர்களிடம் சாட்சியாக தசரதபிரானின் திருமனைவியர்க்கு பிரசவம் பார்த்த கூனிக்கிழவி வழங்கிய பிறப்புச் சான்றிதழ், நம் தரப்பு வழக்கறிஞர்கள் மூலமாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் என்று தீர்ப்பினைக் கண்ட திருக்கணத்திலேயே உணர்ந்தோம்.
தீர்ப்பினை ஜீரணிக்க இயலாத தீயசக்தியான மூத்தத் திம்மி இப்போது ஒரு அறிக்கை விட்டிருக்கிறது. பதினேழு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்ரீராமர் பிறந்ததையே உறுதிப்படுத்திவிட்டார்கள் ஆரியர்கள். வெறும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜசோழன் மறைந்ததை உறுதிப்படுத்த திராவிடர்களிடம் ஆவணங்கள் இல்லையே என்று புலம்பித் தள்ளியிருக்கிறது. மூத்தத் திம்மிக்கு இது முதல் அடி. அடுத்த அடியை மாட்சிமை பொருந்திய உச்சநீதிமன்றம் இன்னும் சில காலத்தில் வழங்க இருக்கிறது. ஸ்ரீராமர் தலைமையில் ஸ்ரீலட்சுமணர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீசுக்ரீவர் மற்றும் ஸ்ரீவானரப்படையைச் சேர்ந்த பொறியியல் அறிஞர்கள் பதினேழு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்ரீராமேஸ்வரத்திலிருந்து, ஸ்ரீஇலங்கைக்கு கட்டிய பாலம் குறித்தான வழக்கில் இந்த ஸ்ரீத்தீர்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.
ஸ்ரீராமர் பிறந்ததையே ஆதாரப்பூர்வமாக, அறிவியல்பூர்வமாக, ஆவணப்பூர்வமாக நிரூபித்தவர்கள் ஹிந்துஸ்தானத்தின் புனித எண்பது கோடி ஹிந்துக்கள். ஸ்ரீராமர் பாலம் கட்டியதையா நிரூபிக்க முடியாமல் தோல்வி அடைவார்கள். ஸ்ரீராமர் எந்த கல்லூரியில் படித்தார்? என்ன பட்டம் வாங்கினார்? என்பதையெல்லாம் ஸ்ரீ ஹிந்துக்களின் வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் பல்கலைக்கழக ஆவணங்கள் மூலமாக நிரூபிப்பார்கள். அப்போது மூத்தத்திம்மியின் தீயக்கேள்விகளுக்கு திருவிடை கிடைக்கும். ஸ்ரீராமருக்கு பாலம் கட்ட உதவிய அணிலும் கூட நீதிப்படியேறி சாட்சி சொல்லத்தான் போகிறது. ஸ்ரீராமரின் பாலத்தை இடித்த மூத்தத் திம்மியே, அப்பாலத்தை வானரங்கள் துணைகொண்டு மீண்டும் கட்டிக் கொடுத்தாக வேண்டுமென்று தீர்ப்பு வரத்தான் போகிறது. அந்நாள்தான் ஹிந்துஸ்தானத்தின் எண்பதுகோடி ஹிந்துக்களின் வரலாற்றில் பொன்னாள்.
ஸ்ரீராமர் வானரங்கள் துணைகொண்டு பாலம் கட்டியபோது எடுத்த வண்ணப்படத்தை இங்கேயே பிரசுரித்திருக்கிறோம். இதையும் ஆதாரமாக எடுத்துக் கொண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளால் நீதிநிலைநாட்டப்படுவது உறுதி. இறுதிவெற்றி ஸ்ரீராமருக்கே!

Thursday, September 30, 2010

கடப்பாறையேவ ஜெயதே – அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு !!

http://www.vinavu.com/2010/09/30/ayodhya-injustice/
வினவு!
Skip to content

* Home
* அறிமுகம்
* வினவை ஆதரியுங்கள்!
* அங்காடி
* நூல்கள்

கடப்பாறையேவ ஜெயதே – அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு !!

15/20




பாபர் மசூதி ராம ஜென்ம பூமி அயோத்தி தீர்ப்பு

இந்து மதவெறி பாஸிஸ்டுகளால் இடிக்கப்படும் பாபர் மசூதி

”பாபர் மசூதியின் மொத்த வளாகமும் இந்துக்களுக்கு உரியது. அதுதான் இராமன் பிறந்த இடம், அது இராமனுக்கு சொந்தமானது. பாபரின் உத்தரவின் பேரில் கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது. இது இசுலாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால், அந்தக் கட்டிடத்தை மசூதி என்றே கருத இயலாது. அதன்மீது முஸ்லிம்களுக்கு (சன்னி வக்ப் போர்டுக்கு) எந்த உரிமையும் இல்லை” என்பது நீதிபதி சர்மா அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.

”இராமன் பிறந்த இடம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அங்கே இந்துக்கள் வெகு நீண்ட காலமாக வழிபட்டு வருகிறார்கள். எனவே மசூதிக் கட்டிடத்தின் மையப்பகுதி இந்துக்களுக்கு சொந்தமானது. இஸ்லாமியக் கோட்பாடுகளின் படி அது ஒரு மசூதி அல்ல என்ற போதிலும் சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் உள் தாழ்வாரம் இரண்டு பகுதியினராலும் வரலாற்று ரீதியாகவே வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. எனவே, தற்போது ராமன் சிலை வைக்கப்பட்டுள்ள மையப்பகுதி இந்துக்களுக்கு தரப்படவேண்டும். தாழ்வாரம் உள்ளிட்ட மொத்த இடம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ராமஜன்மபூமி நியாஸ், சன்னி வக்ப் போர்டு, நிர்மோகி அகாரா ஆகியோர் மூவருக்கும் தரப்படவேண்டும்.” இது நீதிபதி அகர்வால் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.

”சர்ச்சைக்குரிய இடம் பாபரால் அல்லது பாபரின் ஆணையின் பேரில் கட்டப்பட்ட மசூதி. ஏற்கெனவே இடிபாடுகளாக இருந்த ஒரு இடத்தின் மீது அது கட்டப்பட்டிருக்கிறதே அன்றி, கோயிலை இடித்து கட்டப்படவில்லை. அங்கே மசூதி கட்டப்படுவதற்கு நெடுநாள் முன்னதாகவே அந்தப் பரந்த பகுதியின் ஏதோ ஒரு சிறிய இடத்தில்தான் இராமன் பிறந்திருக்கிறார் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் நிலவியது. குறிப்பாக இந்த இடம் சுட்டிக்காட்டும்படியான கருத்து இந்துக்களிடம் நிலவவில்லை. ஆனால் மசூதி கட்டப்பட்ட சில காலத்துக்குப் பின்னர், இந்த இடத்தில் தான் ராமன் பிறந்தார் என்று இந்துக்கள் அதனை அடையாளப்படுத்த தொடங்கினர். 1855 இல் ராம் சபுத்ரா, சீதா ரசோய் என்ற கட்டுமானங்கள் அங்கே உருவாக்கப்படுவதற்கு முன்னரே மசூதியின் சுற்றுச்சுவர் அருகே இந்துக்கள் வழிபாடு செய்து வந்தனர். மொத்தத்தில் இரு தரப்பினருமே சர்ச்சைக்குரிய இந்த வளாகத்தில் வழிபாடு செய்து வந்திருக்கின்றனர்.

ஆனால் குறிப்பிட்ட மொத்த இடத்தின் மீதான தங்களது தனிப்பட்ட உரிமை (TITLE ) குறித்த எந்த ஆவணத்தையும் இரு தரப்பினராலும் தர இயலவில்லை. பகுதி அளவிலான உரிமையை நிலைநாட்டும் ஆவணங்களும் இருதரப்பினரிடமும் இல்லை. இது இரு தரப்பினருடைய அனுபவ பாத்தியதையாகவே இருந்து வந்துள்ளது. 1949 இல் அங்கே ராமன் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

மேற்சொன்ன நிலைமைகளைக் கணக்கில் கொண்டு மையமண்டபத்திற்கு கீழே உள்ள பகுதி இந்துக்களுக்கு தரப்படுகிறது. மொத்த வளாகமும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு மூன்று பேருக்கும் வழங்கப்படவேண்டும்.” இது நீதிபதி கான் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.

தீர்ப்பின் முழு விவரத்தையும் படித்து, அது குறித்து மயிர் பிளக்கும் ஆய்வுகள் விளக்கங்கள் இனி வழங்கப்படும். சன்னி வக்ப் போர்டு இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லப்போவதாக அறிவித்திருக்கிறது. இதில் வென்றவர் யார் தோற்றவர் யார் என்றெல்லாம் பார்க்கக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகவத் கூறியிருக்கிறார். அந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்ற தங்களது கூற்று நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு விட்டதாக பாஜக வினர் புளகாங்கிதம் அடைந்துள்ளனர்.

“இது ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு. 1992 இல் அங்கே ஒரு மசூதி இருந்ததா இல்லையா, அது இடிக்கப்பட்டதை உலகமே பார்த்ததா இல்லையா, அந்த இடத்தின் உரிமையாளர் யார்? இதுதான் இந்த உரிமை மூல வழக்கில் எழுப்பப் பட்டிருந்த (TITLE SUIT) கேள்வி. அதற்கு பதில் அளிக்காமல், தான் பதிலிருக்கத் தேவையில்லாத, தனக்கு விசயம் தெரியாத மதம், மற்றும் வரலாறு சார்ந்த கேள்விகளுக்குள் நீதிமன்றம் மூக்கை நுழைத்திருக்கிறது. ” என்று கருத்து தெரிவித்திருக்கிறார் பிரபல உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ராஜீவ் தவான்.

ராஜீவ் தவான் கூறியிருப்பதுதான் இந்த தீர்ப்பைப் பற்றி கூறத்தக்க மிக மென்மையான விமரிசனம். “இந்த நாட்டின் இரண்டாம்தர குடிமகன் என்பதை ஒப்புக்கொள். உன்னை உயிர்வாழ அனுமதிக்கிறேன்” என்று குஜராத் படுகொலை நாயகன் மோடி சொன்ன செய்தியைத்தான், “சுக்குமி-ளகுதி-ப்பிலி” என்று வேறு விதமாகப் பதம் பிரித்து சொல்லியிருக்கிறது அலகாபாத் உயர்நீதிமன்றம்.

பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமன் கோயில் இருந்ததா, அது பாபரால் இடிக்கப்பட்டதா என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொறுப்பை மத்திய அரசு, உச்சநீதி மன்றத்திடம் தள்ளிவிட்ட போது, “இவை எங்கள் ஆய்வு வரம்புக்கு அப்பாற்பட்டவை” என்று கூறி அதனை நிராகரித்தது உச்சநீதிமன்றம். உச்ச நீதிமன்றம் எதனை நிராகரித்ததோ அந்தக் கேள்விகளுக்குள் புகுந்து தீர்ப்பும் சொல்லியிருக்கிறது லக்னோ உயர்நீதிமன்றம். “அங்கே ராமன் பிறந்தான் என்பது இந்துக்களின் நம்பிக்கை” என்று ஒரு உரிமையியல் வழக்குக்கு தேவைப்படும் எவ்வித ஆதாரங்களுக்குள்ளும் போகாமல் இந்து நம்பிக்கையையே ஒரு தீர்ப்புக்கான அடிப்படையாகக் கூறியிருக்கிறார்கள் சர்மாவும் அகர்வாலும். ”நம்பிக்கையை நீதிமன்றம் ஒப்புக்கொள்ள வேண்டுமேயன்றி, அதனை ஆராயக்கூடாது. தீர்ப்பு வழங்கும் அதிகாரமும் நீதிமன்றத்துக்கு கிடையாது” என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் இன் வாதம். தற்போது தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்திருப்பதால் அவர்கள் நீதிமன்றத்தைக் கொண்டாடுகிறார்கள்.

”கோயிலை இடித்துத்தான் பாபர் மசூதியைக் கட்டினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, மசூதிக்கு கீழே இருப்பது கோயிலும் இல்லை. அயோத்தி முன்னர் பவுத்த மையமாக இருந்தது. அதனைப் பார்ப்பனியம் கொன்றொழித்தது. அயோத்தி மட்டுமல்ல, தென்னகத்தின் கோயில்கள் அனைத்தும் பவுத்த, சமண வழிபாட்டிடங்களை ஆக்கிரமித்தும், கொள்ளையடித்தும் பார்ப்பன மதத்தினரால் உருவாக்கப்பட்டவை.. ”என்பவையெல்லாம் ஏராளமான ஆதாரங்களுடன் எழுதப்பட்டிருக்கின்றன.

இத்தனைக்கும் பிறகுதான் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. “எப்படியோ, ஒரு வழியாக நல்லிணக்கம் வந்தால் சரி” என்று அமைதி விரும்பிகளைப் போல பார்ப்பன பாசிசக் கும்பல் நைச்சியமாகப் பேசத்தொடங்கியிருக்கிறது.

ஒரு உரிமை மூல வழக்கில் (TITLE SUIT) 16 ஆம் நூற்றாண்டு வரை பின்னோக்கி சென்று ஆவண ஆராய்ச்சியில் ஈடுபடலாம் என்பதை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் ஒப்புக்கொள்வார்களேயானால், நல்லது. இதனையே ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்வோம். வரலாற்றில் நேர் செய்ய வேண்டிய கணக்குகள் நிறைய இருக்கின்றன. அசைக்க முடியாத ஆதாரங்களும் இருக்கின்றன.

நாகை புத்தவிகாரையின் தங்க விக்கிரகத்தை திருடி உருக்கித்தான் திருவரங்கம் கோயிலின் திருப்பணியை செய்ததாகவும், கோயிலின் மதில் சுவரை எழுப்புவதற்கு வேலை செய்த சூத்திர, பஞ்சம மக்களை கூலி கொடுக்காமல் ஏமாற்றி கொள்ளிடத்தில் மூழ்கடித்துக் கொன்றதாகவும் அந்தக் கோயிலின் வரலாற்று ஆவணமாக வைணவர்களால் அங்கீகரிக்கப்படும் கோயிலொழுகு நூலில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் 1000 ஆண்டு விழா கண்ட பெரியகோயிலும் கூட இலங்கையையும் கேரளத்தையும் கொள்ளையடித்த காசில் கட்டப்பட்டது. விவசாயிகளின் ரத்தத்தில் பராமரிக்கப்பட்டது. இவற்றுக்கும் அந்தக் கோயிலிலேயே கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கின்றன.

அல்லது சிதம்பரம் கோயிலை எடுத்துக் கொள்வோம், சைவ மெய்யன்பர்கள் போற்றிப் புகழும் பெரிய புராணத்தில் நந்தனை எரித்ததற்கு ஆதாரம் இல்லையா, அல்லது நடராசப் பெருமானின் சந்நிதிக்கு எதிரில் நந்தனாரின் சிலை இருந்தது என்று கூறும் உ.வே.சாமிநாதய்யரின் பதிவு இல்லையா?

எல்லா ஆதாரங்களும் தயாராக இருக்கின்றன. ஆனால் மேற்படி கோயில்களையோ, கோயில் பிரகாரங்களையோ அப்படியே வைத்துக்கொண்டு நீதி கேட்டால் நமது நீதிமன்றங்கள் நீதி வழங்கமாட்டார்கள். அவற்றை இடித்துத் தரைமட்டமாக்கி, “சர்ச்சைக்குரிய இடம்” என்று பெயர் சூட்ட வேண்டும். சில ஆயிரம் உயிர்களைக் கொன்று போடவேண்டும். அந்தப் பிணங்களின் மீதேறி ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும்.

அப்புறம், பெரியபுராணம், கோயிலொழுகு, திவ்வியப்பிரபந்தம், கல்வெட்டு ஆதாரம் .. போன்றவற்றை வைத்து வாதம் செய்தால் நீதிமன்றம் நம்முடைய வழக்கை ஒரு உரிமை மூல (TITLE SUIT) வழக்காக எடுத்துக் கொண்டு ‘நீதி’ வழங்கும். ஆலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பிலிருந்து நாம் புரிந்து கொள்ளக்கூடிய நீதி இதுதான்.

பின்குறிப்பு – 1:

அப்படியானால் 1992 இல் உலகமே பார்த்திருக்க பாபர் மசூதியை இடித்துத் தள்ளினார்களே கரசேவகர்கள், அதுக்காக லிபரான் கமிசனெல்லாம் போட்டு முட்டைக்கு மயிர் பிடுங்கி அறிக்கை சமர்ப்பித்தார்களே அந்த வழக்குகளையெல்லாம் என்ன செய்வார்கள்? மசூதி இடிப்பை குற்றம் என்று இனிமேலும் கூறிக்கொண்டிருப்பது நியாயமாகுமா? 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியன்று லக்னோ உயர்நீதிமன்றம் வழங்கவிருக்கும் தீர்ப்பை, தம்முடைய தீர்க்கதரிசனத்தால் உணர்ந்து கொண்டு, அந்த தீர்ப்பை 1992, டிசம்பர் 6 ஆம் தேதியன்று முன்தேதியிட்டு அமல்படுத்தியிருக்கிறார்கள் கரசேவகர்கள். அன்று கடப்பாரை ஏந்திய ஒரு நாலு பேரின் கையிலாவது சுத்தியலைக் கொடுத்து உச்சநீதிமன்ற நீதிபதி ஆக்குவதுதான் நீதி தேவதைக்கு இந்தியா செலுத்தும் மரியாதையாக இருக்கும். இல்லையா?

பின்குறிப்பு – 2:

பாபர் காலத்து டைட்டில் சூட்டையே விசாரித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறதே, தங்களுடைய நிலத்தை ராஜா ஹரிசிங் உடன் ஒரு கட்டப்பஞ்சாயத்து செய்து பறித்துக் கொண்ட இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் ஒரு டைட்டில் சூட் போட்டால், அயோத்தி வழக்கைப் போலவே அதனையும் விசாரித்து நேர் சீராக ஒரு தீர்ப்பை அந்த மக்களுக்கு இந்திய நீதிமன்றம் வழங்குமா?

பாபர்மசூதி இருந்த நிலத்தை மூன்றாக பிரித்து தீர்ப்பு

பாபர்மசூதி இருந்த நிலத்தை மூன்றாக பிரித்து தீர்ப்பு
http://www.bbc.co.uk/tamil/news/story/2010/09/100930_babrijudgement.shtml
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பு
இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் அயோத்தியில் பாபர்மசூதி இருந்த நிலத்தை மூன்றாக பிரித்து ஒரு பகுதி முஸ்லீம்களுக்கும், இரண்டாவது பகுதி நிர்மோகி அகாரா என்கிற இந்து சாதுக்களின் அமைப்புக்கும், மூன்றாவது பகுதி மற்ற இந்து அமைப்புகளுக்கும் அளிக்கும்படி அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை தீர்ப்பளித்திருக்கிறது.
அதே நேரத்தில், ஹிந்து கடவுளான ராமர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டுவரும் இடம், ஹிந்துக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியாவில், 60 ஆண்டுகளாக நீடித்துவந்த சர்ச்சைக்குரிய அயோத்திப்பிரச்சினை வழக்கின் தீர்ப்பை, அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் லக்னோ பெஞ்ச் வியாழனன்று பிற்பகல் வழங்கியது.
அந்தத் தீர்ப்பில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாகப் பிரித்து, ஒரு பகுதியை ஹிந்து மகாசபைக்கும், இன்னொரு பகுதியை, ஹி்ந்து சாதுக்களின் கூட்டமைப்பான நிர்மோகி அகாராவுக்கும், இன்னொரு பகுதியை முஸ்லிம்களின் சுனி வக்ஃப் வாரியத்துக்கும் வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நீதிதிகள் அகர்வால் மற்றும் எஸ்.வி. கான் ஆகியோர், சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்று பெரும்பான்மை தீர்ப்பு வழங்கிய நிலையில், நீதிபதி தரம்வீர் ஷர்மா மட்டும், அந்தப் பகுதி முழுவதும் ஹிந்துக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
குறிப்பாக, கடந்த 1992-ம் ஆண்டு ஹி்ந்து கடு்ம்போக்குவாதிகளால் இடிக்கப்பட்ட மசூதியின் மையப்பகுதி இருந்த சர்ச்சைக் குரிய இடம், ஹிந்து மகாசபைக்கு வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் மூன்று நீதிபதிகளும் ஒருமித்த கருத்தைக்கொண்டிருந்தார்கள். அந்த இடத்தில்தான் முதலில் 1949 ஆண்டும் பிறகு 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகும் ராமர் சிலைகள் வைக்கப்பட்டன.
அதேபோல், சீதா தேவியின் சமையலறை மற்றும் ராமரின் உடைமைகள் இருந்ததாகக் கூறப்படும் பகுதிகளை நிர்மோகி அகாராவுக்கு வழங்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்திருக்கிறார்கள்.
சில இந்து அமைப்புக்கள் தீர்ப்பை வரவேற்றுள்ளன
முஸ்லிம்களைப் பொருத்தவரை, அவர்களுக்கும் மூன்றில் ஒரு பகுதி வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். எந்த ஒரு தரப்புக்கும் மூன்றில் ஒரு பகுதி சரியாகக் கிடைக்காவிட்டால், மத்திய அரசு கையகப்படுத்தி வைத்துள்ள அருகில் உள்ள பகுதியிலிருந்து தேவையான இடத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தை இந்திய நடுவணரசு ஏற்கெனவே கையகப்படுத்தி வைத்துள்ளது.
சர்ச்சைக்குரிய இடத்தில், முதலில் கோயில் இருந்ததாகவும் அதை இடித்துவிட்டு அங்கு மசூதி கட்டப்பட்டதாகவும் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் ஆவணங்களின் மூலம் அது நிரூபணமாகியுள்ளதாகவும் இரண்டு நீதிபதிகள் தெரிவித்துள் ளனர். கோயிலை இடித்துவிட்டு பாபர் அந்த மசூதியைக்கட்டி யது இஸ்லாத்துக்கு எதிரானது என்பதால் அதை மசூதியாகக் கருத முடியாது என்றும் அந்த நீதிபதிகள் கூறியுள்ளனர்.
ஆனால், மசூதியைக்கட்ட கோயில் இடிக்கப்படவில்லை என்றும், இடிந்துகிடந்த கோயிலின் மீதுதான் மசூதி கட்டப்பட்ட தாகவும் நீதிபதி எஸ்.வி. கான் தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.
மசூதி கட்டப்படும் வரை, பரந்த அந்த நிலப்பகுதியில் ஏதாவது ஒரு இடத்தில் ராமர் பிறந்தார் என்று ஹிந்துக்கள் நம்பிக்கை கொண்டிருந்ததாகவும், ஆனால், எந்த குறிப்பிட்ட இடத்தில் ராமர் பிறந்தார் என்பது குறித்த தெளிவான ஆதாரம் இல்லை என்றும் நீதிபதி கான் குறிப்பிட்டிருக்கிறார்.
சர்ச்சைக்குரிய கட்டிடம் அல்லது மசூதி பாபரால் கட்டப்பட்டது என்பதே கேள்விக்குறியாக உள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய இடம் முழுவதும் தங்களுக்குச் சொந்தம் என்று கோரி சுனி வக்ஃப் வாரியம் தாக்கல் செய்த மனு, சட்டவிதி களின்படி காலம் கடந்து செய்யப்பட்டதால், அதைத் தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது.
மேலும், சர்ச்சைக்குரிய இடத்தில் தற்போதுள்ள நிலை மூன்று மாதங்களுக்கு நீடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித் துள்ளனர். தங்களுக்கான பகுதிகளை எவ்வாறு பகிர்ந்து கொள் வது என்பது தொடர்பாக, சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்கள் யோசனைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.