Sunday, October 10, 2010

ஸ்ரீராமருக்கே ஜெயம்!

http://www.luckylookonline.com/2010/10/blog-post.html
ஸ்ரீராமருக்கே ஜெயம்!
October 4, 2010

இராமர் பாலம் கட்டப்பட்டபோது எடுத்த வண்ணப்படம். அணில் அப்போது வேலையில் பிஸியாக இருந்ததால் படத்தில் இல்லை.
உலகம் போற்றும் உத்தம பாரதம் புண்ணியபூமிதான் என்பதை மீண்டுமொரு முறை அலகாபாத் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பின் வாயிலாக உறுதி செய்திருக்கிறது. மாட்சிமை பொருந்திய இந்த உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு மூன்றில் இரண்டு பங்கு நியாயமான தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. தீர்ப்பு வழங்கிய இருவரில் தரம்வீர் ஷர்மா மற்றும் சுதிர் அகர்வால் இருவரும் புண்ணிய மதத்தைச் சார்ந்தவர்கள். மீதியிருக்கும் ஒருவரான சிக்பத் உல்லா கான் மட்டும் முல்லா மதத்தைச் சார்ந்தவர். நாட்டை ஆளும் அண்டோமேனியாவின் மிஷினரி மதத்தைச் சார்ந்தவர் யாரும் இந்த குழுவில் இல்லை என்பதே ஹிந்துக்களுக்கு ஆறுதலான ஒரு விஷயம்.
ஷர்மா மற்றும் அகர்வால் இருவரும் ஸ்ரீராமரின் பிறப்பை உறுதி செய்திருக்கிறார்கள். அயோத்தியில் பாபரால் கட்டப்பட்ட கட்டடத்தின் முக்கியமான பகுதியில்தான் தசரதபிரானின் அரண்மனை இருந்ததாகவும், குறிப்பாக மசூதியின் முக்கியமான கோபுர மாடம் இருந்தப் பகுதியில்தான் ஸ்ரீராமர் அவதரித்ததாகவும் தங்களது தீர்ப்பில் உறுதியாக சொல்லியிருக்கிறார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் ஹிந்து மாநிலம், உலகுக்கு தத்து தந்திருக்கும் உலகப்புகழ் தங்கத்தாரகை வழக்கம்போல தீர்ப்பினை வரவேற்று ஹிந்து மக்களின் வயிற்றில் பால்வார்த்திருக்கிறார். அகிலம் காக்கும் அம்மா கரசேவைக்கு செங்கல் அனுப்பி வைத்தவர் ஆயிற்றே? அவரிடமிருந்து மாற்று விமர்சனம் வந்திருந்தால்தான் நாம் ஆச்சரியம் கொள்ள ஏதுவாக அமைந்திருக்கும். ஸ்ரீமான் அத்வானி, ஸ்ரீமான் நரேந்திரமோடி வரிசையில் ஹிந்துஸ்தானத்தின் ஹிந்துமக்களுக்கு அபிமான தலைவராக புரட்சித்தலைவி தங்கத்தாரகை அவர்கள்தான் விளங்குகிறார் என்பது மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
அம்மாவின் அறிவுப்பூர்வமான அறிக்கை விடுத்திருக்கும் விளைவு தமிழ் ஹிந்துச்சூழலில் மிக முக்கியமானது. முன்னாள் திம்மிக்களாக விளங்கிய ஸ்ரீமான் கோபாலசாமி, ஸ்ரீமான் நெடுமாறன் ஆகியோர் இத்தீர்ப்பு குறித்து கிஞ்சித்தும் வாய்திறந்துவிட முடியாதபடி புரட்சித்தலைவியின் அறிக்கை அவர்களது வாயை திருநூல் கொண்டு கட்டிப்போட்டிருக்கிறது. உளறலுக்குப் பெயர்போன கம்யூனிஸ்டுகளும் கூட அம்மாவின் புண்ணியக் கட்டுப்பாட்டில் இருப்பதால் வழக்கமான உளறலை உளறித்தள்ளாமல் வாய்மூடி மவுனிகளாக மாறினார்கள். நம்மூர் தேசியத் திராவிட திம்மிக்கும் வேறு வழியில்லை, தீர்ப்பை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
"ஸ்ரீராமர் எந்த கல்லூரியில் பொறியியல் படித்தார்?" என்று முன்பு எள்ளிநகையாடிய மூத்த திராவிடத் திம்மி இப்போது எங்கேபோய் தன் முகத்தை வைத்துக் கொள்ளப் போகிறார் என்பதுதான் இப்போது ஹிந்துமக்கள் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் இன்றியமையாத கேள்வியாக இருக்கிறது. மாட்சிமை பொருந்திய நீதிபதிகளே ஸ்ரீராமர் பதினேழு இலட்சத்து இருபத்தி எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அயோத்தியில் அவதரித்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அனேகமாக அவர்களிடம் சாட்சியாக தசரதபிரானின் திருமனைவியர்க்கு பிரசவம் பார்த்த கூனிக்கிழவி வழங்கிய பிறப்புச் சான்றிதழ், நம் தரப்பு வழக்கறிஞர்கள் மூலமாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் என்று தீர்ப்பினைக் கண்ட திருக்கணத்திலேயே உணர்ந்தோம்.
தீர்ப்பினை ஜீரணிக்க இயலாத தீயசக்தியான மூத்தத் திம்மி இப்போது ஒரு அறிக்கை விட்டிருக்கிறது. பதினேழு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்ரீராமர் பிறந்ததையே உறுதிப்படுத்திவிட்டார்கள் ஆரியர்கள். வெறும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜசோழன் மறைந்ததை உறுதிப்படுத்த திராவிடர்களிடம் ஆவணங்கள் இல்லையே என்று புலம்பித் தள்ளியிருக்கிறது. மூத்தத் திம்மிக்கு இது முதல் அடி. அடுத்த அடியை மாட்சிமை பொருந்திய உச்சநீதிமன்றம் இன்னும் சில காலத்தில் வழங்க இருக்கிறது. ஸ்ரீராமர் தலைமையில் ஸ்ரீலட்சுமணர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீசுக்ரீவர் மற்றும் ஸ்ரீவானரப்படையைச் சேர்ந்த பொறியியல் அறிஞர்கள் பதினேழு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்ரீராமேஸ்வரத்திலிருந்து, ஸ்ரீஇலங்கைக்கு கட்டிய பாலம் குறித்தான வழக்கில் இந்த ஸ்ரீத்தீர்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.
ஸ்ரீராமர் பிறந்ததையே ஆதாரப்பூர்வமாக, அறிவியல்பூர்வமாக, ஆவணப்பூர்வமாக நிரூபித்தவர்கள் ஹிந்துஸ்தானத்தின் புனித எண்பது கோடி ஹிந்துக்கள். ஸ்ரீராமர் பாலம் கட்டியதையா நிரூபிக்க முடியாமல் தோல்வி அடைவார்கள். ஸ்ரீராமர் எந்த கல்லூரியில் படித்தார்? என்ன பட்டம் வாங்கினார்? என்பதையெல்லாம் ஸ்ரீ ஹிந்துக்களின் வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் பல்கலைக்கழக ஆவணங்கள் மூலமாக நிரூபிப்பார்கள். அப்போது மூத்தத்திம்மியின் தீயக்கேள்விகளுக்கு திருவிடை கிடைக்கும். ஸ்ரீராமருக்கு பாலம் கட்ட உதவிய அணிலும் கூட நீதிப்படியேறி சாட்சி சொல்லத்தான் போகிறது. ஸ்ரீராமரின் பாலத்தை இடித்த மூத்தத் திம்மியே, அப்பாலத்தை வானரங்கள் துணைகொண்டு மீண்டும் கட்டிக் கொடுத்தாக வேண்டுமென்று தீர்ப்பு வரத்தான் போகிறது. அந்நாள்தான் ஹிந்துஸ்தானத்தின் எண்பதுகோடி ஹிந்துக்களின் வரலாற்றில் பொன்னாள்.
ஸ்ரீராமர் வானரங்கள் துணைகொண்டு பாலம் கட்டியபோது எடுத்த வண்ணப்படத்தை இங்கேயே பிரசுரித்திருக்கிறோம். இதையும் ஆதாரமாக எடுத்துக் கொண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளால் நீதிநிலைநாட்டப்படுவது உறுதி. இறுதிவெற்றி ஸ்ரீராமருக்கே!

Thursday, September 30, 2010

கடப்பாறையேவ ஜெயதே – அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு !!

http://www.vinavu.com/2010/09/30/ayodhya-injustice/
வினவு!
Skip to content

* Home
* அறிமுகம்
* வினவை ஆதரியுங்கள்!
* அங்காடி
* நூல்கள்

கடப்பாறையேவ ஜெயதே – அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு !!

15/20




பாபர் மசூதி ராம ஜென்ம பூமி அயோத்தி தீர்ப்பு

இந்து மதவெறி பாஸிஸ்டுகளால் இடிக்கப்படும் பாபர் மசூதி

”பாபர் மசூதியின் மொத்த வளாகமும் இந்துக்களுக்கு உரியது. அதுதான் இராமன் பிறந்த இடம், அது இராமனுக்கு சொந்தமானது. பாபரின் உத்தரவின் பேரில் கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது. இது இசுலாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால், அந்தக் கட்டிடத்தை மசூதி என்றே கருத இயலாது. அதன்மீது முஸ்லிம்களுக்கு (சன்னி வக்ப் போர்டுக்கு) எந்த உரிமையும் இல்லை” என்பது நீதிபதி சர்மா அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.

”இராமன் பிறந்த இடம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அங்கே இந்துக்கள் வெகு நீண்ட காலமாக வழிபட்டு வருகிறார்கள். எனவே மசூதிக் கட்டிடத்தின் மையப்பகுதி இந்துக்களுக்கு சொந்தமானது. இஸ்லாமியக் கோட்பாடுகளின் படி அது ஒரு மசூதி அல்ல என்ற போதிலும் சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் உள் தாழ்வாரம் இரண்டு பகுதியினராலும் வரலாற்று ரீதியாகவே வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. எனவே, தற்போது ராமன் சிலை வைக்கப்பட்டுள்ள மையப்பகுதி இந்துக்களுக்கு தரப்படவேண்டும். தாழ்வாரம் உள்ளிட்ட மொத்த இடம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ராமஜன்மபூமி நியாஸ், சன்னி வக்ப் போர்டு, நிர்மோகி அகாரா ஆகியோர் மூவருக்கும் தரப்படவேண்டும்.” இது நீதிபதி அகர்வால் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.

”சர்ச்சைக்குரிய இடம் பாபரால் அல்லது பாபரின் ஆணையின் பேரில் கட்டப்பட்ட மசூதி. ஏற்கெனவே இடிபாடுகளாக இருந்த ஒரு இடத்தின் மீது அது கட்டப்பட்டிருக்கிறதே அன்றி, கோயிலை இடித்து கட்டப்படவில்லை. அங்கே மசூதி கட்டப்படுவதற்கு நெடுநாள் முன்னதாகவே அந்தப் பரந்த பகுதியின் ஏதோ ஒரு சிறிய இடத்தில்தான் இராமன் பிறந்திருக்கிறார் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் நிலவியது. குறிப்பாக இந்த இடம் சுட்டிக்காட்டும்படியான கருத்து இந்துக்களிடம் நிலவவில்லை. ஆனால் மசூதி கட்டப்பட்ட சில காலத்துக்குப் பின்னர், இந்த இடத்தில் தான் ராமன் பிறந்தார் என்று இந்துக்கள் அதனை அடையாளப்படுத்த தொடங்கினர். 1855 இல் ராம் சபுத்ரா, சீதா ரசோய் என்ற கட்டுமானங்கள் அங்கே உருவாக்கப்படுவதற்கு முன்னரே மசூதியின் சுற்றுச்சுவர் அருகே இந்துக்கள் வழிபாடு செய்து வந்தனர். மொத்தத்தில் இரு தரப்பினருமே சர்ச்சைக்குரிய இந்த வளாகத்தில் வழிபாடு செய்து வந்திருக்கின்றனர்.

ஆனால் குறிப்பிட்ட மொத்த இடத்தின் மீதான தங்களது தனிப்பட்ட உரிமை (TITLE ) குறித்த எந்த ஆவணத்தையும் இரு தரப்பினராலும் தர இயலவில்லை. பகுதி அளவிலான உரிமையை நிலைநாட்டும் ஆவணங்களும் இருதரப்பினரிடமும் இல்லை. இது இரு தரப்பினருடைய அனுபவ பாத்தியதையாகவே இருந்து வந்துள்ளது. 1949 இல் அங்கே ராமன் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

மேற்சொன்ன நிலைமைகளைக் கணக்கில் கொண்டு மையமண்டபத்திற்கு கீழே உள்ள பகுதி இந்துக்களுக்கு தரப்படுகிறது. மொத்த வளாகமும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு மூன்று பேருக்கும் வழங்கப்படவேண்டும்.” இது நீதிபதி கான் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.

தீர்ப்பின் முழு விவரத்தையும் படித்து, அது குறித்து மயிர் பிளக்கும் ஆய்வுகள் விளக்கங்கள் இனி வழங்கப்படும். சன்னி வக்ப் போர்டு இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லப்போவதாக அறிவித்திருக்கிறது. இதில் வென்றவர் யார் தோற்றவர் யார் என்றெல்லாம் பார்க்கக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகவத் கூறியிருக்கிறார். அந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்ற தங்களது கூற்று நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு விட்டதாக பாஜக வினர் புளகாங்கிதம் அடைந்துள்ளனர்.

“இது ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு. 1992 இல் அங்கே ஒரு மசூதி இருந்ததா இல்லையா, அது இடிக்கப்பட்டதை உலகமே பார்த்ததா இல்லையா, அந்த இடத்தின் உரிமையாளர் யார்? இதுதான் இந்த உரிமை மூல வழக்கில் எழுப்பப் பட்டிருந்த (TITLE SUIT) கேள்வி. அதற்கு பதில் அளிக்காமல், தான் பதிலிருக்கத் தேவையில்லாத, தனக்கு விசயம் தெரியாத மதம், மற்றும் வரலாறு சார்ந்த கேள்விகளுக்குள் நீதிமன்றம் மூக்கை நுழைத்திருக்கிறது. ” என்று கருத்து தெரிவித்திருக்கிறார் பிரபல உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ராஜீவ் தவான்.

ராஜீவ் தவான் கூறியிருப்பதுதான் இந்த தீர்ப்பைப் பற்றி கூறத்தக்க மிக மென்மையான விமரிசனம். “இந்த நாட்டின் இரண்டாம்தர குடிமகன் என்பதை ஒப்புக்கொள். உன்னை உயிர்வாழ அனுமதிக்கிறேன்” என்று குஜராத் படுகொலை நாயகன் மோடி சொன்ன செய்தியைத்தான், “சுக்குமி-ளகுதி-ப்பிலி” என்று வேறு விதமாகப் பதம் பிரித்து சொல்லியிருக்கிறது அலகாபாத் உயர்நீதிமன்றம்.

பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமன் கோயில் இருந்ததா, அது பாபரால் இடிக்கப்பட்டதா என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொறுப்பை மத்திய அரசு, உச்சநீதி மன்றத்திடம் தள்ளிவிட்ட போது, “இவை எங்கள் ஆய்வு வரம்புக்கு அப்பாற்பட்டவை” என்று கூறி அதனை நிராகரித்தது உச்சநீதிமன்றம். உச்ச நீதிமன்றம் எதனை நிராகரித்ததோ அந்தக் கேள்விகளுக்குள் புகுந்து தீர்ப்பும் சொல்லியிருக்கிறது லக்னோ உயர்நீதிமன்றம். “அங்கே ராமன் பிறந்தான் என்பது இந்துக்களின் நம்பிக்கை” என்று ஒரு உரிமையியல் வழக்குக்கு தேவைப்படும் எவ்வித ஆதாரங்களுக்குள்ளும் போகாமல் இந்து நம்பிக்கையையே ஒரு தீர்ப்புக்கான அடிப்படையாகக் கூறியிருக்கிறார்கள் சர்மாவும் அகர்வாலும். ”நம்பிக்கையை நீதிமன்றம் ஒப்புக்கொள்ள வேண்டுமேயன்றி, அதனை ஆராயக்கூடாது. தீர்ப்பு வழங்கும் அதிகாரமும் நீதிமன்றத்துக்கு கிடையாது” என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் இன் வாதம். தற்போது தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்திருப்பதால் அவர்கள் நீதிமன்றத்தைக் கொண்டாடுகிறார்கள்.

”கோயிலை இடித்துத்தான் பாபர் மசூதியைக் கட்டினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, மசூதிக்கு கீழே இருப்பது கோயிலும் இல்லை. அயோத்தி முன்னர் பவுத்த மையமாக இருந்தது. அதனைப் பார்ப்பனியம் கொன்றொழித்தது. அயோத்தி மட்டுமல்ல, தென்னகத்தின் கோயில்கள் அனைத்தும் பவுத்த, சமண வழிபாட்டிடங்களை ஆக்கிரமித்தும், கொள்ளையடித்தும் பார்ப்பன மதத்தினரால் உருவாக்கப்பட்டவை.. ”என்பவையெல்லாம் ஏராளமான ஆதாரங்களுடன் எழுதப்பட்டிருக்கின்றன.

இத்தனைக்கும் பிறகுதான் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. “எப்படியோ, ஒரு வழியாக நல்லிணக்கம் வந்தால் சரி” என்று அமைதி விரும்பிகளைப் போல பார்ப்பன பாசிசக் கும்பல் நைச்சியமாகப் பேசத்தொடங்கியிருக்கிறது.

ஒரு உரிமை மூல வழக்கில் (TITLE SUIT) 16 ஆம் நூற்றாண்டு வரை பின்னோக்கி சென்று ஆவண ஆராய்ச்சியில் ஈடுபடலாம் என்பதை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் ஒப்புக்கொள்வார்களேயானால், நல்லது. இதனையே ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்வோம். வரலாற்றில் நேர் செய்ய வேண்டிய கணக்குகள் நிறைய இருக்கின்றன. அசைக்க முடியாத ஆதாரங்களும் இருக்கின்றன.

நாகை புத்தவிகாரையின் தங்க விக்கிரகத்தை திருடி உருக்கித்தான் திருவரங்கம் கோயிலின் திருப்பணியை செய்ததாகவும், கோயிலின் மதில் சுவரை எழுப்புவதற்கு வேலை செய்த சூத்திர, பஞ்சம மக்களை கூலி கொடுக்காமல் ஏமாற்றி கொள்ளிடத்தில் மூழ்கடித்துக் கொன்றதாகவும் அந்தக் கோயிலின் வரலாற்று ஆவணமாக வைணவர்களால் அங்கீகரிக்கப்படும் கோயிலொழுகு நூலில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் 1000 ஆண்டு விழா கண்ட பெரியகோயிலும் கூட இலங்கையையும் கேரளத்தையும் கொள்ளையடித்த காசில் கட்டப்பட்டது. விவசாயிகளின் ரத்தத்தில் பராமரிக்கப்பட்டது. இவற்றுக்கும் அந்தக் கோயிலிலேயே கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கின்றன.

அல்லது சிதம்பரம் கோயிலை எடுத்துக் கொள்வோம், சைவ மெய்யன்பர்கள் போற்றிப் புகழும் பெரிய புராணத்தில் நந்தனை எரித்ததற்கு ஆதாரம் இல்லையா, அல்லது நடராசப் பெருமானின் சந்நிதிக்கு எதிரில் நந்தனாரின் சிலை இருந்தது என்று கூறும் உ.வே.சாமிநாதய்யரின் பதிவு இல்லையா?

எல்லா ஆதாரங்களும் தயாராக இருக்கின்றன. ஆனால் மேற்படி கோயில்களையோ, கோயில் பிரகாரங்களையோ அப்படியே வைத்துக்கொண்டு நீதி கேட்டால் நமது நீதிமன்றங்கள் நீதி வழங்கமாட்டார்கள். அவற்றை இடித்துத் தரைமட்டமாக்கி, “சர்ச்சைக்குரிய இடம்” என்று பெயர் சூட்ட வேண்டும். சில ஆயிரம் உயிர்களைக் கொன்று போடவேண்டும். அந்தப் பிணங்களின் மீதேறி ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும்.

அப்புறம், பெரியபுராணம், கோயிலொழுகு, திவ்வியப்பிரபந்தம், கல்வெட்டு ஆதாரம் .. போன்றவற்றை வைத்து வாதம் செய்தால் நீதிமன்றம் நம்முடைய வழக்கை ஒரு உரிமை மூல (TITLE SUIT) வழக்காக எடுத்துக் கொண்டு ‘நீதி’ வழங்கும். ஆலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பிலிருந்து நாம் புரிந்து கொள்ளக்கூடிய நீதி இதுதான்.

பின்குறிப்பு – 1:

அப்படியானால் 1992 இல் உலகமே பார்த்திருக்க பாபர் மசூதியை இடித்துத் தள்ளினார்களே கரசேவகர்கள், அதுக்காக லிபரான் கமிசனெல்லாம் போட்டு முட்டைக்கு மயிர் பிடுங்கி அறிக்கை சமர்ப்பித்தார்களே அந்த வழக்குகளையெல்லாம் என்ன செய்வார்கள்? மசூதி இடிப்பை குற்றம் என்று இனிமேலும் கூறிக்கொண்டிருப்பது நியாயமாகுமா? 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியன்று லக்னோ உயர்நீதிமன்றம் வழங்கவிருக்கும் தீர்ப்பை, தம்முடைய தீர்க்கதரிசனத்தால் உணர்ந்து கொண்டு, அந்த தீர்ப்பை 1992, டிசம்பர் 6 ஆம் தேதியன்று முன்தேதியிட்டு அமல்படுத்தியிருக்கிறார்கள் கரசேவகர்கள். அன்று கடப்பாரை ஏந்திய ஒரு நாலு பேரின் கையிலாவது சுத்தியலைக் கொடுத்து உச்சநீதிமன்ற நீதிபதி ஆக்குவதுதான் நீதி தேவதைக்கு இந்தியா செலுத்தும் மரியாதையாக இருக்கும். இல்லையா?

பின்குறிப்பு – 2:

பாபர் காலத்து டைட்டில் சூட்டையே விசாரித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறதே, தங்களுடைய நிலத்தை ராஜா ஹரிசிங் உடன் ஒரு கட்டப்பஞ்சாயத்து செய்து பறித்துக் கொண்ட இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் ஒரு டைட்டில் சூட் போட்டால், அயோத்தி வழக்கைப் போலவே அதனையும் விசாரித்து நேர் சீராக ஒரு தீர்ப்பை அந்த மக்களுக்கு இந்திய நீதிமன்றம் வழங்குமா?

பாபர்மசூதி இருந்த நிலத்தை மூன்றாக பிரித்து தீர்ப்பு

பாபர்மசூதி இருந்த நிலத்தை மூன்றாக பிரித்து தீர்ப்பு
http://www.bbc.co.uk/tamil/news/story/2010/09/100930_babrijudgement.shtml
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பு
இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் அயோத்தியில் பாபர்மசூதி இருந்த நிலத்தை மூன்றாக பிரித்து ஒரு பகுதி முஸ்லீம்களுக்கும், இரண்டாவது பகுதி நிர்மோகி அகாரா என்கிற இந்து சாதுக்களின் அமைப்புக்கும், மூன்றாவது பகுதி மற்ற இந்து அமைப்புகளுக்கும் அளிக்கும்படி அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை தீர்ப்பளித்திருக்கிறது.
அதே நேரத்தில், ஹிந்து கடவுளான ராமர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டுவரும் இடம், ஹிந்துக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியாவில், 60 ஆண்டுகளாக நீடித்துவந்த சர்ச்சைக்குரிய அயோத்திப்பிரச்சினை வழக்கின் தீர்ப்பை, அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் லக்னோ பெஞ்ச் வியாழனன்று பிற்பகல் வழங்கியது.
அந்தத் தீர்ப்பில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாகப் பிரித்து, ஒரு பகுதியை ஹிந்து மகாசபைக்கும், இன்னொரு பகுதியை, ஹி்ந்து சாதுக்களின் கூட்டமைப்பான நிர்மோகி அகாராவுக்கும், இன்னொரு பகுதியை முஸ்லிம்களின் சுனி வக்ஃப் வாரியத்துக்கும் வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நீதிதிகள் அகர்வால் மற்றும் எஸ்.வி. கான் ஆகியோர், சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்று பெரும்பான்மை தீர்ப்பு வழங்கிய நிலையில், நீதிபதி தரம்வீர் ஷர்மா மட்டும், அந்தப் பகுதி முழுவதும் ஹிந்துக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
குறிப்பாக, கடந்த 1992-ம் ஆண்டு ஹி்ந்து கடு்ம்போக்குவாதிகளால் இடிக்கப்பட்ட மசூதியின் மையப்பகுதி இருந்த சர்ச்சைக் குரிய இடம், ஹிந்து மகாசபைக்கு வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் மூன்று நீதிபதிகளும் ஒருமித்த கருத்தைக்கொண்டிருந்தார்கள். அந்த இடத்தில்தான் முதலில் 1949 ஆண்டும் பிறகு 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகும் ராமர் சிலைகள் வைக்கப்பட்டன.
அதேபோல், சீதா தேவியின் சமையலறை மற்றும் ராமரின் உடைமைகள் இருந்ததாகக் கூறப்படும் பகுதிகளை நிர்மோகி அகாராவுக்கு வழங்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்திருக்கிறார்கள்.
சில இந்து அமைப்புக்கள் தீர்ப்பை வரவேற்றுள்ளன
முஸ்லிம்களைப் பொருத்தவரை, அவர்களுக்கும் மூன்றில் ஒரு பகுதி வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். எந்த ஒரு தரப்புக்கும் மூன்றில் ஒரு பகுதி சரியாகக் கிடைக்காவிட்டால், மத்திய அரசு கையகப்படுத்தி வைத்துள்ள அருகில் உள்ள பகுதியிலிருந்து தேவையான இடத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தை இந்திய நடுவணரசு ஏற்கெனவே கையகப்படுத்தி வைத்துள்ளது.
சர்ச்சைக்குரிய இடத்தில், முதலில் கோயில் இருந்ததாகவும் அதை இடித்துவிட்டு அங்கு மசூதி கட்டப்பட்டதாகவும் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் ஆவணங்களின் மூலம் அது நிரூபணமாகியுள்ளதாகவும் இரண்டு நீதிபதிகள் தெரிவித்துள் ளனர். கோயிலை இடித்துவிட்டு பாபர் அந்த மசூதியைக்கட்டி யது இஸ்லாத்துக்கு எதிரானது என்பதால் அதை மசூதியாகக் கருத முடியாது என்றும் அந்த நீதிபதிகள் கூறியுள்ளனர்.
ஆனால், மசூதியைக்கட்ட கோயில் இடிக்கப்படவில்லை என்றும், இடிந்துகிடந்த கோயிலின் மீதுதான் மசூதி கட்டப்பட்ட தாகவும் நீதிபதி எஸ்.வி. கான் தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.
மசூதி கட்டப்படும் வரை, பரந்த அந்த நிலப்பகுதியில் ஏதாவது ஒரு இடத்தில் ராமர் பிறந்தார் என்று ஹிந்துக்கள் நம்பிக்கை கொண்டிருந்ததாகவும், ஆனால், எந்த குறிப்பிட்ட இடத்தில் ராமர் பிறந்தார் என்பது குறித்த தெளிவான ஆதாரம் இல்லை என்றும் நீதிபதி கான் குறிப்பிட்டிருக்கிறார்.
சர்ச்சைக்குரிய கட்டிடம் அல்லது மசூதி பாபரால் கட்டப்பட்டது என்பதே கேள்விக்குறியாக உள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய இடம் முழுவதும் தங்களுக்குச் சொந்தம் என்று கோரி சுனி வக்ஃப் வாரியம் தாக்கல் செய்த மனு, சட்டவிதி களின்படி காலம் கடந்து செய்யப்பட்டதால், அதைத் தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது.
மேலும், சர்ச்சைக்குரிய இடத்தில் தற்போதுள்ள நிலை மூன்று மாதங்களுக்கு நீடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித் துள்ளனர். தங்களுக்கான பகுதிகளை எவ்வாறு பகிர்ந்து கொள் வது என்பது தொடர்பாக, சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்கள் யோசனைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Friday, November 6, 2009

புர்கா போட்டுண்டா என்ன

http://vidhoosh.blogspot.com/2009/11/blog-post_06.html
எனக்கு இன்னும் புர்கா, பக்டி, கூங்கட் போன்றவற்றை அணியும் அவர்களது கலாச்சாரமோ இல்லை அவர்களது புனித நூல்களையோ முழுமையாக படிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. அதனால் பர்தா தேவையா இல்லையா என்னவென்றெல்லாம் ஆராய்ச்சி பண்ணும் அளவுக்கு கிஞ்சித்தும் தகுதி இல்லாத எனக்கு இதென்ன கேள்வி?

இப்போதெல்லாம் ப்யூட்டி பார்லர் போய் வெய்யிலில் கருத்துப் போன என் தோலை வெளுக்கச் செய்யும் பிளீச்சிங், ஸ்கின் டோனிங் போன்றவற்றுக்கு சில ஆயிரங்களை செலவழித்து விட்டு, இரு சக்கர வாகனங்களில் போகும் போதும்,

அக்னி நட்சத்திரத்தின் போது சென்னை அண்ணா சாலை முதல் தம்புரான்பட்டி வரை இருக்கும் மக்கள் அனைவரும் ஈரத்துண்டை தலையில் போட்டுக் கொண்டாமாதிரியே நானும்,

பன்றிக் காய்ச்சல் பயத்தில் உலகம் முழுதும் இருந்த பகுத்தறிவாளர்களும் செய்ததையும் போலவே, நானும் ஏதோ ஒரு காரணத்தால் பாதுகாப்பு கருதி, துப்பட்டாவையோ, கர்சீப்பையோ இல்லை துணிக்கிழிசலையோ, இல்லை ஐம்பது ரூபாய்க்கு விற்ற மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கும் மாஸ்க் அல்லது ஏதோ ஒன்றையோ அணிந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள வாயையும் மூக்கையும் மூடிக்கொண்டேன்.

அதே வாயால் பேசும்போதும் 'பெண்ணடிமைத்தனம்' என்று நான் பேசும் போதும் சிறிது யோசித்து விட்டு பேசினால் நன்றாக இருக்கும். ஆண்களிடம் இருந்து பெண்ணைப் பாதுகாப்பது என்று இன்னும் ஏதேதோ காரணங்கள் கூறினாலும், எனக்கு தோன்றிய ஒன்றையும் பகிர விரும்புகிறேன்.

பாலைவனங்கள், மணற்பகுதிகள், அதிக வெய்யில் சூடு, தூசிக்காற்று மற்றும் அனல் வீசும் காற்றுடைய பகுதிகளில் வாழும் ராஜஸ்தானியர்கள், அரபியர்கள், முகமதியர்கள் வாயையும், மூக்கையும் மறைக்கும் முகத்திரை (PARDA / BURKA) மற்றும் பக்டி (PAGDI) என்ற தலைப்பாகை அணிகிறார்கள். இதனால் என்ன லாபம்? இயற்கையாகவே அவர்கள் இருக்கும் சுற்று சூழல் மாசிலிருந்து தம்மைப் பாதுகாக்க இந்தமாதிரி எல்லாம் துணிகளையோ அல்லது உடலையே மறைக்கும் உடையோ அணிய வேண்டியுள்ளது.

இன்றைக்கு சென்னையில் இருக்கும் அனல் காற்றுக்கும், தூசிக்கும், கார்பன் மாசுக்கும் தினமும் நான் என் கண்ணைத் தவிர முகத்தின் எல்லா பகுதிகளையும் துப்பட்டாவால் மறைத்துக் கொண்டால்தான் வீசிங், தொண்டை எரிச்சல், வராமலும், கண்ணிலும் வாயிலும் மண் துகள்கள் விழாமலும், அதற்கும் மேல் ஒரு ஹெல்மெட் ஒன்றையும் அணிந்து கொள்ள வேண்டியிருப்பதால், இருக்கும் கொஞ்ச நஞ்ச தலை முடியும் கொட்டாமல் இருக்க தலைக்கும் ஒரு துணியை போட்டு மூடிக் கொள்ள வேண்டியிருக்கிறது. கண்ணில் தூசி விழாமல் இருக்கவும், UV கதிர்களிடமிருந்து தப்பிக்கவும், வெயிலில் கண் கூசாமல் இருக்கவும், ஒரு கறுப்புக் கண்ணாடியும் அணிந்துகொள்ள வேண்டியுள்ளது.

இது போதாது என்று என் கைகள் கருக்காமல் இருக்கவும், புடவை கட்டி டூ வீலர் ஓட்டும் போது இடது பக்கம் புடவைத் தலைப்பு விலகி விடும் பயத்திலும், கிளவ்சோ இல்லை, காட்டன் முழுக்கைச் சட்டை ஒன்றையும் மேலே அணிந்து கொள்ளவும் வேண்டி இருக்கிறது.

சிக்னல் போன்ற இடங்களில் கால் கீழே ஊன்றினால் புடவை மேலே ஏறிக்கொண்டு சில நேரம் ஆடு சதைப் பகுதிகள் வரை தூக்கிக் கொண்டு விடுவதால், எல்லோர் பார்வையையும் தவிர்க்கவென ஒரு டைட்ஸ் ஒன்றையும் அணிந்து கொண்டால்தான், என்னால் மாற்று சிந்தனைகளோ பயமோ இன்றி அலுவலகத்துக்கு புடவை அணித்து, இரு சக்கர வாகனத்தில் பயணிக்க முடிகிறது. அட தெரிஞ்சா தெரிஞ்சிட்டு போகட்டுமே என்றளவுக்கு இன்னும் துணியவில்லையோ என்னவோ போடா மாதவா.....

இங்கே சிக்னலில் எப்போது இவள் புடவை விலகும் - கணுக்கால் தெரியும், நாம் பார்க்கலாம் என்று மற்ற வாகன ஓட்டிகள் காத்திருக்கிறார்கள் என்றோ, கழுகுக் கண்கள் என்றோ, ஆணாதிக்கம் என்றெல்லாமோ, ச்சே இந்த உலகமே மோசம் என்றோ நான் கூற வரவில்லை.

என் சொந்த விருப்பு வெறுப்பின் பேரில், இதெல்லாம் நான் செய்கிறேன். அதே போல இந்த மாதிரி சுற்றுச்சூழலிலிருந்து தம்மை பாதுக்காக்க யாரோ ஒருவர் ஏற்படுத்திய சில பழக்கங்களை, காலப்போக்கில் ஹாமில்டன் வாராவதி அம்பட்டன் வாராவதியானது போலாகியதோ என்னவோ?

திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் எழுதியிருப்பதையும் பாருங்களேன்.

இதை படிச்சதும் தோன்றியதை சொல்லலாமே என்ற உணர்வுதான். சரியோ தவறோ? என் தினசரி டூ வீலர் ஆடை ஆயத்தம் செய்வதற்கு பதிலாக நானும் ஒரு புர்கா வாங்கி போட்டுண்டா என்ன? அதையே கொஞ்ச நாள் கழிச்சு சட்டமாக்கிட மாட்டீங்களே?

இஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்க்கை! - சகுந்தலா நரசிம்ஹன்


திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் பிரபல எழுத்தாளரும், பெண்ணுரிமைக்குக் குரல் எழுப்பும் சங்கங்களின் பிரதிநிதியுமாவார்.

சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பெண்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருபவராவார்.

பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் துணிச்சலுடன் "சதி" (இந்தியாவில் விதவைகள் உயிரோடு எரிக்கப்படுதல்) பற்றிய நூலை எழுதி பரபரப்புக்குள்ளானவர். தனது கணவருடன் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

'ஹிஜாபை அணிந்தால்தால் உள்ளே வரமுடியும்' என்ற நிலை வந்தால் நான் சவூதி அரேபியாவிற்கே செல்ல மாட்டேன். என் கணவர் மட்டும் எவ்வித இஸ்லாமிய ஆடையையும் அணியாதபோது, நான் மட்டும் ஏன் அணியவேண்டும்? என்பதே எனது மறுப்பிற்கு முதல் காரணமாக இருந்தது. என்றாலும் எனது ஆர்வம் வெறுப்பை வென்றது.

சவூதி அரேபியாவின் ரியாத் ஏர்போர்ட்டில் நான் கால்வைத்த கணத்திலேயே மிகவும் பண்போடு "பெண்கள் பகுதி" க்கு அழைத்துச் சென்று அமர வைக்கப்பட்டேன். விசாச் சடங்குகளை முடித்துவர என் கணவர் சென்றிருக்கும் வேளையில் ஒரு குட்டி அரண்மனை போன்று மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்த அந்த அறையின் அலங்காரங்களில் மனம் லயித்துப் போனேன்.

செல்வச் செழிப்புடன் கூடிய கண்ணியமும் கெளரவமும் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் கொடுக்கப்படுவது என் மனதை முதன் முதலாகத் தொட்டு விட்டது!

சவூதிக்குக் கிளம்பும் முன்னரே அங்குள்ள ஹிஜாப் பற்றிய விதிமுறைகளைப் பற்றி அறிந்திருந்த காரணத்தினால், புர்காவினைக் கையோடு கொண்டு வந்திருந்தேன். என்றாலும், ஏர்போர்ட் ஃபார்மாலிட்டீஸ்களை முடித்து நகரத்தின் அழகான வீதிக்களைக் கடந்து ஃபைஸலியா ஹோட்டல் வந்து சேரும் வரை நான் புர்காவை அணிந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் யாரும் சொல்லவேயில்லை.

மறுநாள் காலையில், ஹோட்டல் நிர்வாகத்தினர் அழகான எம்ராய்டரிங் செய்யப்பட்ட புதிய கறுப்பு நிற அபாயா (இந்தியாவில் நாம் புர்கா என்று சொல்லும் உடையை சவூதியில் இவ்வாறு தான் அழைக்கிறார்கள்) ஒன்றினைக் கொடுத்தார்கள். இதனை நான் அணிந்து கொண்டால் வெளியே செல்லும் வேளையில் அதிக சவுகரியமாக இருக்கமுடியும் என்று கனிவோடு ஆலோசனை கூறினார்கள்.

"சவுகரியமா? இதன் மூலமா?" என்று மனதில் கேட்டுக் கொண்டேன்.

எனது தோற்றத்திற்கும், தனித்தன்மைக்கும் வேட்டு வைக்கும் இந்த உடை, எனக்கு சவுகரியத்தை அளிக்கப்போகிறதா? என்ற கேள்வியை வெளிக்காட்டாமல் சற்றே சினத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன்!. ஆனால் நான் ரியாதில் தங்கியிருந்த அடுத்த ஆறு நாட்களில் என் எள்ளலுக்கும் சினத்திற்கும் தகுந்த பதில் கிடைத்தபோது வியப்பிலாழ்ந்து போனேன்.

நோபல் பரிசுக்கு இணையாக அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் உலகளாவிய அளவில் சாதனை படைக்கும் விஞ்ஞானிகளுக்கான விருதுகளையும் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுகளையும் ஆண்டுதோறும் வழங்கும் சர்வதேசப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பு எனக்கு விடுக்கப்பட்டிருந்தது.

மறுநாள் காலையில், அரண்மனையின் உயரிய கம்பீரத்தோடு, பிரம்மாண்டமாய் அலங்கரிக்கப்பட்டிருந்த "பிரின்ஸ் சுல்தான் க்ராண்ட் செரமோனியல் ஹால்" இல் அடியெடுத்து வைத்த எனக்குப் புதிய வியப்பு ஒன்று அறிமுகமானது. அத்துணை பெரிய சபையில் பெண்களுக்காகத் தனிப் பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.

பூக்களை மொத்தமாக இறக்குமதி செய்யும் பெரும் நிறுவனம் ஒன்றின் பெண் உரிமையாளர் எனது வலப் பக்கத்திலும் அவருக்கு அருகில் ஒரு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் போதிக்கும் பெண் நிபுணரும் அமர்ந்திருந்தனர்.

ஒரு முழு ஆண்டின் பெரும்பகுதி நேரத்தினை நியூயார்க்கில் செலவழிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் தலைவியும் ஜே ஆர் டி டாட்டாவின் நெருங்கிய தோழி என்று அறியப் பட்டவருமான ஒரு பெண்மணி எனது இடப்பக்கத்திலும் அவருக்கு அருகில் இளம் பத்திரிகையாளர் பெண் ஒருவரும் அமர்ந்திருந்தார். ஜித்தாவிலிருந்து வந்திருந்த 'மிகப் பெரும் சொத்துக்களுக்கு வாரிசுதாரர்' என்று அறியப் பட்ட ஒரு பெண்ணும் எங்களோடு அமர்ந்திருந்தார்.

சரி, இதில் வியக்க என்ன உள்ளது என்கிறீர்களா? அவர்கள் அனைவருமே அணிந்திருந்தது கறுப்பு நிற ஹிஜாப் உடை தான்.

என்னருகில் அமர்ந்திருந்த பெரும் நிறுவன உரிமையாளரான அந்த இளம் பெண் விழா நிகழ்ச்சிகளைப் படம் எடுத்துக் கொண்டிருந்த டிவி கேமராக்கள் எங்களை நோக்கித் திரும்பும் நேரத்தில் எல்லாம் விலகியிருக்கும் தன் முகத்திரையினை சரி செய்து முகத்தை மூடிக் கொண்டார். புதிராகப் பார்க்கும் என் பார்வையினைப் புரிந்தவராக என் பக்கம் சாய்ந்து, "கேமராக்கள் நம்மைப் படம்பிடிப்பதை விட்டும் விலகி விட்டால் எனக்கு தெரியப் படுத்துங்கள்!" என்றார்.

நிகழ்ச்சிக்கு வந்த மற்ற அனைத்துப் பெண்களைப் போலவே இவரும் மிக அழகிய ஆங்கிலம் பேசுவதைக் கேட்டு வியப்பு விலகாமல் ஆர்வத்துடன் நெருங்கி கேட்டேன்: "எதனால் தங்கள் முகத்தினைக் கேமராமுன் காண்பிக்க மறுக்கிறீர்கள்?"

அதற்கு அவர், "நீங்கள் இப்போது அணிந்துள்ள புடவை, ஏதேனும் ஒன்றில் சிக்கி, உங்கள் முழங்கால் வெளியே தெரிவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் அல்லவா? அது போலவே அறிமுகமற்றப் புதியவர்கள் என் முகத்தைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை!" என்றார்.

"முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவிக்கப்பட்டு அடிமைப்படுத்தப் படுகிறார்கள்" என்ற சொல்லையே இந்தியாவில் திரும்பத் திரும்ப கேட்டிருந்த என் மனதினுள் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

என் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பெண் தனது கைகளுக்கும் விரல்களுக்கும் உதட்டுக்கும் கண்களுக்கும் தேர்ந்த ஒப்பனை செய்திருந்ததையும் கவனித்தேன். மனதில் எழுந்த கேள்விகளை அடக்க முடியாமல் அவர் பக்கம் நெருங்கினேன்.

"இத்தனை அற்புதமான அலங்காரங்களைச் செய்துள்ள உங்கள் அழகை இந்த புர்கா சிதைக்கவில்லையா?" பொருளாதார நிபுணரான அப்பெண் மென்மையாக சிரித்தவாறே கூறினார்.

"இல்லவே இல்லை! இத்தனை அலங்காரங்களையும் என் சந்தோஷத்திற்காக மட்டுமே செய்கிறேன். நம் சுவைக்குத் தக்கவாறு உணவைத் தேர்ந்தெடுத்துச் சுவைத்துச் சாப்பிடுவது நமது தனிப் பட்ட விருப்பமில்லையா அது மாதிரி...!" என்றார்.
அத்துடன் நில்லாமல், "இந்த அழகு அலங்காரங்கள் எல்லாம் வேற்று ஆண் ஒருவரை ஈர்ப்பதற்காக அல்லவே? பின்பு ஏன் கவலை?" என்றார்.

அப்படியென்றால் இத்தனை காலம் மேற்கத்திய மற்றும் கீழத்தேய எழுத்தாளர்கள் அனைவரும், "புர்கா என்பது பெண்ணடிமைத்தனம் என்று கூறி வந்தது பொய்யா?" என்ற பெரிய கேள்வி ஒன்று பூதாகரமாக என் மனதில் உருவாவதை உணர்ந்தேன்.

என் கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் வாரிசுதாரரான ஜித்தாப் பெண்ணிடமும் இது பற்றி உரையாடினேன்.

"உங்களுக்குத் தெரியுமா?" என்று என்னிடம் கேள்வி எழுப்பினார் செல்வச் சீமாட்டியான அந்த பெண். "மேற்கத்திய நாடுகளின் என் பயணங்களில் கவனித்திருக்கிறேன். அலுவல் சார்ந்த உயர் நிகழ்ச்சிகளில் உடல் முழுமையாக மறையும் வண்ணம் பிஸினஸ் சூட் அணிந்து வரும் மேற்கத்தியப் பெண்கள் பலர் இருக்கிறார்கள். இத்தகையோரின் உடைக்கும் ஹிஜாபுக்கும் பெருத்த வித்தியாசம் ஏதுமில்லை!" என்றார்.

"கறுப்பு நிறக் கலாச்சார உடையினை உடல் முழுவதும் சுற்றிக் கொள்ளுதல்" என்று பலரை இதுநாள் வரை கேலி செய்திருந்த எனக்கு, யதார்த்தமான இப்பதில் வெகுவாக யோசிக்க வைத்தது.

பொறுமையின் எல்லையைக் கடந்தவளாக ஆர்வம் மிகுதியில் என் கையில் கொண்டு வந்திருந்த புர்காவை எடுத்து அணிந்து பார்த்தேன். எடுத்த எடுப்பில் சற்றே வெறுப்பாய் உணர்ந்த நான், அடுத்த சில நாழிகைகளில் எனது வெறுப்புத் தளர்வதை உணர ஆரம்பித்தேன். பிற்பாடு ஹிஜாப் அணிந்தவண்ணம் வெளியே செல்லவும் ஆரம்பித்தேன்.

என் போன்றே ஹிஜாப் அணிந்து பார்த்த, மருத்துவத்துறைக்கான பரிசினை வென்ற அமெரிக்கர் ஒருவரின் மனைவி பெண்களின் கூட்டத்திற்கிடையே பேசுகையில், "தான் அணிந்துள்ள ஹிஜாப் மூலம், தான் மிகவும் சவுகரியமாகவே உணர்வதாக"க் குறிப்பிட்டார். "சுருக்கங்கள் நிறைந்த, அடிக்கடி விலகும் எனது ஸ்கர்ட் பற்றி இனிக் கவலையில்லை!" என்று கூறி அங்குள்ள பெண்கள் அனைவரையும் சிரிக்கச் செய்தார்.

வியப்பில் என் விழிகள் அகலும் வண்ணம் நாங்கள் பார்வையிடச் சென்ற தேசியக் கண்காட்சி மையம், பல்கலைக் கழகம், மருத்துவ-ஆராய்ச்சி மையம் என்று எங்கு, எப்பணியில் நோக்கினாலும் பெண்கள் தடங்கலின்றி சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஹிஜாப் அணிந்தவண்ணம் பணிகளில் ஈடுபட்டிருந்ததைத் தனியாகச் சொல்லவும் வேண்டுமா?

அறிவியல், தொழில்நுட்ப ஆய்வாராய்ச்சி நிலையங்களிலும் உயர் தொழில்நுட்பப் பணிகளிலும் அநாயசமாகவும் எளிமையாகவும் அப்பெண்கள் ஹிஜாபுடன் எவ்வித இடைஞ்சலுமின்றி செயற்படுவதைக் கண்டு வியப்பின் எல்லைக்குச் சென்றேன்.

இந்தியத் தூதர் M.O.H ஃபாரூக் அவர்கள் எங்களுக்காக அவர் வீட்டில் அளித்திருந்த உயர் ரக விருந்தில்கூட பெண்கள் (அதிகாரிகளின் மனைவிகள்) அனைவருக்குமான தனித்த இடத்தில் விருந்து நடந்தது.

அதன் பிறகு ஒரு நாளில், கோல்டு மார்க்கெட் எனப்படும் தங்க நகைகள் விற்கும் கடைவீதிக்குச் சென்று வந்தேன். (பார்ப்பதற்கு மும்பையின் ஜாவேரி பஜார் போன்று ஆனால் அதைவிடச் சிறப்பாக இருந்தது இப்பகுதி) அப்பகுதியில் உள்ள ஷாப்பிங் மால்கள் அனைத்திலும் ஹிஜாபுடன் ஏறி இறங்க எனக்கு மிக மிக எளிமையாகவே இருந்தது.

அந்நேரத்தில் அப்பகுதிகளில் சவூதி நாட்டு படித்த இளம் பெண்கள் பலரைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அப்படி பார்த்த பல பெண்கள் தங்கள் கைகளில் லேட்டஸ்ட் டெக்னாலஜி மொபைல் ஃபோன்களை வைத்துக் கொண்டு மகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்தனர். பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் அமர்ந்து, தன் மொபைல் ஃபோனில் டயல் செய்து கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணை அணுகினேன்.

அந்தப் பெண், நவீன கலாச்சாரச் சூழலில் வளர்ந்தவர் என்பது பார்க்கும் பார்வையிலேயே தெரிந்தது. படித்த, பகட்டான உடையணிந்த பெண் என்பதால் ஹிஜாப் குறித்த மாற்றுச் சிந்தனையை எதிர்பார்த்து அணுகினேன்."நீங்கள் ஹிஜாபை விரும்பித்தான் அணிகிறீர்களா?" என்று கேட்டு விட்டேன்.

நொடிக்கூட தாமதிக்காமல் பதில் வந்தது: "இது எனக்கு கண்ணியத்தைப் பெற்றுத் தருகிறது. மேலும் ஒரு உள்ளாடையை அணிவது போன்று எளிமையாகவும் இருக்கிறது" என்றார்.

என்னை ஏறிட்டு நோக்கியவர், என் மனதில் உள்ள குழப்பங்களைப் படித்தது போன்று எதிர்கேள்வி ஒன்றையும் என்னிடமே போட்டார்:

"செரினா வில்லியம்ஸ், இப்போது அணிந்துள்ள ஸ்கர்ட்டை விடச் சிறிய, பிகினி உடையினை அணிந்தால் இன்னும் வேகமாக அவரால் ஆட முடியும்தான். ஆனால் அது அவருக்கு சவுகரியமாக இருக்காது என்பதால் அவர் செய்ய மாட்டார் இல்லையா?" என்றார். இதுநாள் வரை எனக்குக் கிடைக்காத சில விடைகள் சரசரவென்றுக் கிடைக்க ஆரம்பித்தன.

இச்சூழலில், மும்பையின் மலபார் ஹில் பகுதியில் ஒருமுறை நான் கலந்து கொண்ட திருமண டின்னர் பார்ட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. மணமகளாக அலங்காரம் செய்யப்பட்ட பெண் ஒருத்தி, பல்லாயிரம் ரூபாய்கள் செலவழித்து சிகை அலங்காரம் செய்திருந்தாலும் கூன்கட் (Ghoonghat) எனப்படும் முக்காடு கொண்டு தலைப்பகுதியினை நிகழ்ச்சி முழுவதும் தன்னை மறைத்திருந்தாள்.

அவளது அலங்கரித்த தலைமுடியை மறைத்திருப்பது பற்றி நான் எழுப்பிய வினாவிற்கு, "கூன்கட் எனப்படும் தலையினை மறைப்பதுதான் பெரியோர்களுக்குச் செய்யும் மரியாதையாகும். இது எங்கள் பாரம்பரிய கலாச்சாரமாகும்; நான் ஏன் அதை மீற வேண்டும்?" என்று பெருமையாகக் கூறுயதே விடையாகக் கிடைத்தது.

எனவே எனக்கு ஏற்பட்ட பலவித அனுபவத்திலிருந்து சில முடிவுகளுக்கு வந்தேன்.

மும்பையில் ஒரு சமுதாயத்தின் பாரம்பரிய கலாச்சாரத்திற்காக ஒரு பெண் தலையை மறைப்பது பெருமையாக கருதப்படுவதும் அது ஆண்களிடையே 'அடிமைத்தனம்' என்ற கூக்குரலாக வெளியே வருவதில்லை. ஆனால், இஸ்லாத்தில் பெண்கள் ஹிஜாப் அணிகையில் மட்டும் 'பெண்ணடிமை'த் தனமாக உருவகப்படுத்தப் படுவது ஏன்? என்ற நெருடல் அவ்வேளையில் எழுந்தது.

ஒவ்வொரு நாட்டிலும் பெண்ணின் உடை அளவிலான கோட்பாடுகள் என்பது உள்ளது என்பது மறுக்கவே முடியாத உண்மை. ஆனால் அது அவரவர் கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு ஏற்று மாறுபடுகிறது. செரினா வில்லியம்ஸின் உதாரணம் உட்பட.

என்னுடைய ஆறாவது நாளின் முடிவில் அபாயா (ஹிஜாப்) அணிந்த பெண்களில் ஒருத்தியாக என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

இந்த உடை அணிந்ததன் மூலம் நான் எதுவும் சிரமமாக உணர்கிறேனா?

பெண்ணுரிமைக்காக கடுமையாகப் போராடுபவள் என்ற உணர்வில் இருந்து சற்றும் மாறுபடாமல் என் அடிமனதில் இருந்து எழுந்த பதில்,

இல்லை. எனக்கு எந்தச் சிரமமும் இல்லவே இல்லை!

சவூதி அரேபியாவுக்குச் சென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்! அங்கே ஹிஜாப் அணிந்து வலம் வந்தபோதும்! - தமிழாக்கம்: அபூ ஸாலிஹா நன்றி-(www.satyamargam.com) http://www.tmmk.info/news/999726.htm

Thursday, October 15, 2009

என்னைப் போல் ஒருவனா நீ? (சினிமா விமர்சனம் : ஞாநி)

உன்னைப் போல் ஒருவன் என்று படத்தின் தலைப்பு சொல்கிறது. பார்வையாளனான என்னைப் பார்த்து உன்னைப்போல் ஒருவன் என்று சொல்வதாகத்தான் பெரும்பாலும் அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். அது சரியான அர்த்தம் தானா? படத்தில் பெயர் இல்லாத நாயகனே, என்னைப் போல் ஒருவனா நீ?! நான் மனசாட்சியின் குரலுக்கு எப்போதும் செவி கொடுக்கிற ஒரு நடுத்தர வகுப்பு மனிதன்.


என்னால் பிறருக்கு வலியும், பிறரால் எனக்கு வலியும் ஏற்படக்கூடாது என்று விரும்பும் சாதாரண மனிதன். ஜாதி, மதம், மொழி, இனம் அடிப்படையில் மனிதரை மனிதர் உயர்வு தாழ்வு பார்க்கக் கூடாது என்று விரும்பும் ஒருவன். குற்றம் சாட்டப்பட்ட எவரும் முறையாக விசாரிக்கப்பட்டு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறவன். கொலைக் குற்றவாளிக்குக் கூட அதிகபட்சமாக ஆயுள் தண்டனையே தரப்படலாமே தவிர, மரண தண்டனை கூடாது என்று நினைக்கிறவன்.
சட்டத்தை என் கையில் எடுத்துக் கொள்ள ஆசைப்படாதவன். நீ என்னைப் போல் ஒருவனா? நிச்சயம் இல்லை. எனக்கு எல்லா தீவிரவாதமும் அருவருப்பானது. நீ இஸ்லாமிய தீவிரவாதத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து எதிர்க்கிறாய்.




மேலவளவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் தலைவர் முருகேசனைக் கொன்றவர்களும், தருமபுரியில் அப்பாவியான கல்லூரி மாணவிகளை பேரூந்திலேயே வைத்து எரித்தவர்களும், மதுரையில் பத்திரிகை அலுவலகத்தை தாக்கி அப்பாவி ஊழியர்களைக் கொன்றவர்களும் இது போன்ற எண்ணற்ற தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் பலரும் தமிழகச் சிறையில் தான் இருக்கிறார்கள். 



அவர்களை விசாரணை இல்லாமல் கொல்ல வேண்டும் என்ற கோபம் உனக்கு வரவில்லை. இஸ்லாமிய தீவிரவாதிகளையும் அவர்களுக்கு உதவி செய்ததால் ஹிந்து வெடிமருந்து வியாபாரியையும் கொல்லப் புறப்படுகிறாய். 



உனக்கு ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து விற்றவன் மட்டும் மகாத்மா காந்தியா? அவனை ஏன் கொல்லாமல் விட்டிருக்கிறாய்? அவனிடம் ஆர்.டி.எக்ஸ் தொடர்ந்து வாங்கியவர்கள் / வாங்குகிறவர்கள் எல்லோரும் உன்னைப்போல தீவிரவாத எதிர்ப்பாளர்களா என்ன? இஸ்லாமிய தீவிரவாதிகளை போலீஸ் பிடித்தால் உடனே சுட்டுக் கொன்றுவிட வேண்டும் என்று சொல்லுகிற இந்து தீவிரவாதத்தின் குரலாகவே நீ பேசுகிறாய். 



அப்படிச் செய்யாமல் போலீஸ் இருப்பதில் எரிச்சலடைந்து மிரட்டல் வேலையில் ஈடுபடுகிறாய். எந்த மதத்து திவிரவாதியாக இருந்தாலும் சரி, அவர்களை விசாரிக்காமல் சுட்டுக்கொன்றுவிட வேண்டும் என்று நினைக்கிறவர்கள் சார்பாக புறப்பட்டு வந்தவனும் அல்ல நீ. அப்படி நினைக்கிறவர்கள் கருத்தை ஏற்பதாக இருந்தால், மசூதியை இடித்து மதக்கலவரங்களை உற்பத்தி செய்த அத்வானியையும் அரசு இயந்திரத்தின் உதவியோடு முஸ்லிம்களை கும்பல் கும்பலாகக் கொல்ல ஏற்பாடு செய்த மோடியையும் சுட்டுக் கொல்ல நீ புறப்பட்டிருப்பாய்.
ஆனால் உனக்கு செலக்டிவ் அம்னீஷியா இருக்கிறது. நீ என்னைப்போல் ஒருவன் அல்லவே அல்ல. நான், குற்றம் சாட்டப்படுவர் மோடியானாலும், முகமது ஆனாலும் சரி முறையான நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றே வலியுறுத்தும் சாமான்யன்.
உன்னைப் போல் ஒருவன் என்று நீ சொல்வது என்னையல்ல என்றால், யாரைப் பார்த்து அப்படிச் சொல்லியிருக்கிறாய்? படத்தில் இன்னொரு நாயகனாக வருகிற காவல் அதிகாரியைப் பார்த்துத்தான்.
அதுதான் அசல் அர்த்தம். நாங்கள் தான் எங்களைச் சொன்னதாக தப்பாக எடுத்துக்கொண்டிருக்கிறோம். அந்தக் காவல் அதிகாரி யார்? முதலமைச்சர், தலைமைச் செயலாளர் எல்லோரும் முழு அதிகாரத்தைத் தன்னிடம் கொடுத்தால் தான் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்று மிரட்டுபவர் அவர்.



முழு அதிகாரமும் போலீஸிடம் இருந்தால் தான் விசாரணையில்லாமல் சுட்டுக் கொல்ல முடியும் அல்லவா? அவர் கருத்தும் உன் கருத்தே தான். கடைசியில் நீ கேட்டபடி அந்தத் தீவிரவாதிகளை ஒப்படைக்கிறார். மூன்று பேர் ஜீப் குண்டில் செத்ததும் நீ அவர் ஆள்தான் என்பது அவருக்குத் தெரிந்துவிடுகிறது.



நீ எந்த இடத்திலும் குண்டு வைக்கவில்லை அது வெற்று மிரட்டல் தான் என்று பின்னர் போனில் சொல்லும்போது அது தனக்கு முன்பே தெரியும் என்கிறார்.



அப்படி தெரியுமென்றால், நான்காவது தீவிரவாதியை சுட்டுக்கொல்லும்படி அவர் சொல்லியிருக்கத் தேவையே இல்லையே. உன் மிரட்டலை சாக்காக வைத்து அவர் அந்தத் தீவிரவாதிகளை விசாரணையில்லாமல் கொல்லும் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறார் என்பது தான் உண்மை.



கடைசியில் நீ இருக்கும் இடத்தையும், உன்னையும் கண்டுபிடித்த பிறகு உன்னை சுட்டுக் கொல்லாமல் கைகுலுக்கி வழியனுப்பி வைக்கிறார். ஏன்? நீ அவரைப்போல் ஒருவன் என்பதனால்தான். காவல் துறை என்கவுன்ட்டர் என்ற பெயரில் விசாரணையில்லாமல் தான் கொல்ல விரும்புபவர்களைக் கொல்லும் வசதிக்காக, உன்னைப் போன்றவர்களை மறைமுகமாக ஆதரிக்கும் என்பதுதான் உன்படத்திலிருந்துஎனக்குக் கிடைக்கும் முக்கியச் செய்தி. நீ நிச்சயம் என்னைப் போல் ஒருவன் அல்ல. நான் நிச்சயம் உன்னைப்போல் ஒருவனாக இருக்க விரும்பவே மாட்டேன்.


நன்றி : குமுதம் வார இதழ் 14.10.2009

Tuesday, October 13, 2009

முஸ்லீம்களுக்கு எதிரான திட்டமிட்ட சதி!

சத்தியமார்க்கம் இனைய தளத்தில் வந்த இந்த கட்டுரையை இங்கு பதிவது அவசியம் என கருதியதால் இப்பதிவு. இனி கட்டுரை.......
ஒரு நாட்டின் நீதி, நியாயம், பாதுகாப்பு ஆகியவை நீதித்துறை, காவல்துறை, உளவுத்துறை, இராணுவத்துறை போன்றவற்றால் உறுதிப்படுத்தப்படுகிறது. இதில் முதல் இரண்டு விஷயங்களைத் தவிர்த்து மூன்றாவது விஷயத்தை உள்/வெளி தீய சக்திகளிடமிருந்து நாட்டு மக்களை காவல்துறை, உளவுத்துறை, இராணுவத்துறை போன்றவை பாதுகாக்கின்றன. நாட்டு மக்களிடையே நீதி, நியாயத்தை நீதித்துறை நிர்வகிக்கிறது.
உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயகக் குடியரசான இந்தியாவில், நாடு விடுதலை பெற்ற நாள் முதலே நாட்டுப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கும் பாதுகாப்புத் துறைகள் பெரும்பாலும் முஸ்லிம் சமுதாயத்துக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை அனைவரும் அறிவர். இதில் முக்கியமாக உளவுத்துறையின் முக்கிய அதிகாரங்களில் ஒரு முஸ்லிம் கூட தேர்ந்தெடுக்கப்பட்டு விடாமல் மிக கவனமாக நாட்டு நிர்வாகம் செயல்பட்டு வந்திருக்கின்றது. இந்திய மொத்த மக்கள் தொகையில் சுமார் 15 சதவீதத்திற்கும் அதிகமாக வாழும் முஸ்லிம் சமுதாயத்திற்கு, நாட்டின் அதி உன்னதத் துறைகளில் ஒன்றான உளவுத்துறையில் ஓர் இடம் கூட இல்லை என்பது சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விஷயம் இல்லை.இதன் பின்னணியில் திட்டமிட்ட சதி தொடர்கிறது என்பதைச் சாதாரணமாக சிந்திக்கும் எந்த ஒரு பாமரனும் விளங்கிக் கொள்வான்.
அதே போன்றே காவல்துறை மற்றும் இராணுவத்துறைகளில் முஸ்லிம்கள் பெருவாரியாகப் புறக்கணிக்கப்படுவதும் நாட்டில் இச்சமுதாயத்திற்கு எதிராக நடத்தப்படும் திட்டமிட்டத் தாக்குதல்களிலும் துர் பிரச்சாரங்களிலும் இவ்விரு துறைகளும் மிக அதிகமாக பயன்படுத்தப் பட்டு வருவதும் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியக் குடிமக்களாக நாட்டின் எல்லாவித வசதிகளையும் அனுபவிக்க அடிப்படை உரிமை பெற்ற முஸ்லிம் சமுதாயம், தங்களுக்கான பாதுகாப்பு, கொஞ்சம் கொஞ்சமாக அருகி வருவதை நன்றாக அறிந்திருந்தும் இன்னமும் ஒரு சிறு நம்பிக்கையுடன் பொறுமையைக் கைவிட்டு விடாமல் அமைதியாக வாழ்ந்து வருவதன் காரணம், "தங்களுக்கு நீதி, நியாயம் மறுக்கப்படாது; சத்தியம் ஒருநாள் வெல்லும்" என்ற நீதித்துறையின் மீதான நம்பிக்கையின் அடிப்படையிலாகும். ஆனால், அதற்கும் சமீபகாலங்களில் சாவுமணியடிக்கப்படுகிறதோ என்ற சந்தேகங்கள் முளை விட ஆரம்பித்துள்ளன. அதற்குத் தகுந்தாற் போன்றே, பாரபட்சமற்று நடுநிலையாக நாட்டில் நீதி, நியாயத்தை நிலைநாட்ட வேண்டிய நீதித்துறையிலும் கறுப்பு ஆடுகள் புகுந்து விட்டதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளன.
இதற்கு உதாரணமாக பல்வேறு நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டலாம். நாட்டில் நடக்கும் உப்பு சப்பில்லா விஷயங்களிலிருந்து ஹிந்துத்துவத்திற்குக் காவடி தூக்கும் விஷயங்கள் வரை தேவையெனில் நேரடியாக எவ்வித மனுவோ, புகாரோ இன்றியே அவ்விஷயங்களில் தலையிட்டுக் கருத்தும் உத்தரவுகளும் பிறப்பிக்கும் நீதித்துறை, முஸ்லிம்களின் விஷயங்கள் எனும் போது மட்டும் கண்ணைக் கட்டிக் கொள்கின்றன.
திட்டமிட்டே முஸ்லிம்களின் மீதும் முஸ்லிம் இயக்கங்களின் மீதும் செய்யாத விஷயங்களை தலையில் கட்டும்,
தென்காசி குண்டு வெடிப்புகளிலிருந்து மாலேகான் குண்டுவெடிப்பு வரை நாட்டில் நடக்கும் தீவிரவாத, பயங்கரவாத நிகழ்வுகளாகட்டும்
சொராபுதீன் ஷேக் முதல் பட்லா ஹவுஸ் சம்பவங்கள் வரை முஸ்லிம்களைத் தேடிப் பிடித்து, சிட்டுக் குருவிகளைப் போல் சுட்டுக் கொன்று விட்டு, "பயங்கரவாதிகள் என் கவுண்டரில் கொல்லப்பட்டனர்" எனப் பொய்க் கதை பரப்பும் பூச்சுற்றல்களாகட்டும்
குஜராத், மும்பை, பாகல்பூர், சூரத், கோவை நரவேட்டைகள் முதல் பாபரி மஸ்ஜித் இடிப்பு வரை அவற்றுக்காக நியமிக்கப்பட்ட கமிஷன்கள் குற்றவாளிகள் எனக் கைக்காட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கைகட்டிக் கொண்டிருப்பதாகட்டும்,
முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட எந்த ஒரு அநியாயத்திலும் நீதி, நியாயம் வழங்குவதில் நீதித்துறை பாரபட்சத்துடன் அநீதி இழைத்தே வந்துள்ளது.
சமீபத்தில் இந்நிலை மாறி, முஸ்லிம் சமுதாயத்தின் மீதும் இஸ்லாத்தின் மீதும் சங்கபரிவார அமைப்புகளும் காவல்துறையும் பார்ப்பனீய ஆதரவு ஊடகங்களும் இணைந்து நடத்தும் திட்டமிட்ட காழ்ப்புணர்வு வதந்திகளை நீதித்துறைகளும் அப்படியே ஏற்றெடுத்து, நாட்டின் மிக உயர்ந்த, உன்னத பீடத்தில் நீதியைக் காப்பாற்ற வேண்டிய நிலையிலிருக்கிறோம் என்பதை நீதித்துறை மறந்து, சங்கபரிவாரத்தின் பிரச்சார பீரங்கிகளாக மாறி நீதித்துறையையே களங்கப்படுத்தும் விதத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் மீது நேரடியாகவே தாக்குதலில் ஈடுபட ஆரம்பித்துள்ளன.
இதன் நேரடி உதாரணம், முஸ்லிம்கள் தாடி வைக்கும் விஷயம் தொடர்பாக மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள முஹம்மது சலீம் என்ற மாணவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த ஒரு வழக்கில், "தாடி வைப்பது தாலிபானிசமாகும்" என நீதிபதி மார்க்கண்டேய கட்சு தலைமையிலான குழு அதிகப்பிரசங்கித்தனமாக, வழக்குக்குத் தொடர்பில்லாத கருத்தைத் தெரிவித்ததாகும்.
"அவரவர் அவரவரின் மதத்தைச் சுதந்திரமாக பின்பற்றி வாழலாம்" என அடிப்படை உரிமை வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, இஸ்லாத்தின் மீது தவறான எண்ணம் தோன்றும் விதத்தில் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி, கருத்தும் தீர்ப்பும் அளித்தார் நீதித்துறைக்கே களங்கமான கட்சு. அந்தத் தீர்ப்பை எதிர்த்து மனம் தளராமல் போராடியதால் முஹம்மது சலீமுக்கு, இன்னமும் கறைபடியாமல் இந்திய அரசியல் சாசனத்தையும் சட்டத்தையும் மதிக்கும் மற்றொரு நீதிபதியால்நியாயம் கிடைத்தது.
இது நாட்டின் அதி உன்னத உயர் பீடமான உச்சநீதி மன்றத்தில் நடந்தது என்றால், தற்போது இச்சம்பவம் நடந்து 6 மாதங்கள் முடியும் முன்னரே உச்சநீதி மன்றத்தின் அடுத்த இடத்தில் இருக்கும் ஓர் உயர்நீதி மன்றத்தில் அதனைப் பின்பற்றி மற்றொரு அநீதத் தாக்குதல், முஸ்லிம் சமுதாயத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ளது.
கேரள உயர் நீதிமன்றத்தின் முஸ்லிம் சமுதாயம் மீதான இத்தாக்குதலுக்குக் காரணமானச் சொல்லப் படும் நிகழ்வு:
கேரள மாநிலம் பத்தனம் திட்டை பகுதியிலுள்ள செயிண்ட் ஜோன்ஸ் கல்லூரியில் பயிலும் இரு எம்.பி.ஏ மாணவிகள் இஸ்லாத்திற்கு மதம் மாறத் தீர்மானித்துள்ளனர். முன்னர் இவர்கள் இருவரும் அக்கல்லூரியின் முன்னாள் மாணவர் ஷாஹின்ஷா என்பவரையும் கேரள அரசுப் பேருந்தில் தற்காலிக நடத்துனராகப் பணிபுரியும் சிராஜுதீன் என்பவரையும் விரும்பித் திருமணம் செய்துள்ளனர். இவர்கள் இஸ்லாத்திற்கு மாறுவதாகத் தகவல் கிடைத்ததும் அப்பெண்களின் பெற்றோர் காவல்நிலையத்தில், "தங்கள் மகள்களைக் கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி செய்ததாகவும் அவர்களை மானபங்கப்படுத்த முயன்றதாகவும்" கூறி அவ்விருவர் மீதும் புகார் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவ்விருவர் மீதும் காவல்துறை வழக்கு பதிவுப் செய்துள்ளது. இதற்கிடையில் வழக்குத் தொடுக்கப்பட்ட இருவரும் உயர்நீதி மன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளனர்.
பெற்றோரின் புகாரை மறுத்து, "தங்களின் சொந்த விருப்பப்படியே இஸ்லாத்திற்கு மாறியதாகவும் தாங்கள் விரும்பியே திருமணம் செய்து கொண்டதாகவும்" அவ்விரு பெண்களும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். சாதாரணமாக மேஜர் ஆனவர்களின் மணமுடிவுக்கு மதிப்பளித்து, அவர்கள் விரும்புபவர்களைத் திருமணம் செய்து இணைத்து வைக்கும் நீதிமன்றம், அப்பெண்களின் வாக்குமூலத்திற்குப் பின்னரும் வழக்கைத் தள்ளுபடி செய்யாமல், அவர்களைப் பெற்றோருடன் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், காவல்துறை அவ்விளைஞர்களுக்கு எதிராக கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாகவும் வழக்குப் பதிவு செய்தது.
ஆரம்பத்தில் முதல் தகவலறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வேளையில், "வழக்கில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களுக்கு எதிராக அப்பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்" எனக் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. ஆனால், இதனை அப்பெண்கள் மறுத்ததோடு, தங்கள் "சொந்த விருப்பத்தின் பேரிலேயே திருமணம் புரிந்ததாகவும் தங்களை எவரும் மதம்மாறக் கட்டாயப்படுத்தவில்லை" என்றும் காவல்துறை தாங்கள் கூறாததை எழுதியுள்ளதாகவும் மறுத்திருந்தனர். இருப்பினும் காவல்துறை அவ்விளைஞர்கள் மீதான வழக்கைத் தொடர்ந்தது.
இவ்வழக்கின் மீதான முன்ஜாமீன் மனு மீதான விசாரணை வேளையிலேயே, உச்சநீதி மன்றத்தைத் தொடர்ந்து கேரள உயர்நீதி மன்றமும் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் விதத்திலான ஆட்சேபகரமான கருத்துகளைத் தன் உத்தரவில் கூறியுள்ளது.
கேரள உயர்நீதி மன்றம் தன் உத்தரவில், "முஸ்லிம் இளைஞர்கள் மற்ற சமுதாயப் பெண்களிடம் காதலிப்பது போன்று நடித்துப் பின்னர் இஸ்லாமிய மதத்துக்கு மதமாற்றம் செய்கின்றனர். இதற்காக அவர்களுக்குக் கணிசமான பணம் கிடைக்கின்றது. இயக்கங்களும் சில நபர்களும் இத்திட்டத்தை நடைமுறைபடுத்தச் செயல்படுகின்றனர். இவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் உதவியும் கிடைத்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் பெண்கள் பிரிவு தலைவர் கதீஜா இப்படிப் பட்ட பெண்களை நேரடியாகச் சந்தித்துள்ளார். அது மட்டுமின்றி பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் தொண்டர்களும் இப்பெண்களைச் சந்தித்துள்ளனர்" என்று நீதிமன்றம் உத்தரவின் போது கூறியது.
"மத்திய அரசின் தலையீடும் இவ்விஷயத்தில் தேவை. கட்டாய மதமாற்றத்தைத் தடுப்பது தொடர்பான மத்திய அரசின் நிலைபாட்டை விவரித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட வேண்டும்" எனவும் ஆலோசனை கூறிய நீதிமன்றம், "இவ்வாறு செயல்படும் 'லவ் ஜிஹாத்' மற்றும் 'ரோமியோ ஜிஹாத்' ஆகிய இயக்கங்களின் செயல்பாட்டையும் அந்த இயக்கங்களின் நோக்கம், அமைப்பு, பின்பலம், கேரளத்திற்கு வெளியேயும் சர்வதேச அளவிலும் இவ்வியக்கங்களின் தொடர்புகள், பொருளாதார அடிப்படை, வெளிநாட்டுப் பொருளாதார உதவி, கள்ளநோட்டு-கள்ளக்கடத்தல்-போதைப் பொருள்-தீவிரவாத அமைப்புளுடனான தொடர்பு, கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள இவ்விஷயங்கள் தொடர்பான வழக்குகளின் கணக்கு, மதமாற்றத்திற்கு இரையான பள்ளி-கல்லூரி மாணவிகளின் எண்ணிக்கை போன்ற விஷயங்களை உட்படுத்தி டி.ஐ.ஜியும் மத்திய உள்துறை அமைச்சகமும் மூன்று வாரங்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்" எனக் கூறி முன்ஜாமீன் வழக்கை இரு வாரங்களுக்குத் தள்ளி வைப்பதாக உத்தரவிட்டுள்ளது.
1. இரு இளைஞர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் பாதிக்கப்பட்டதாக சேர்க்கப்பட்டுள்ள இரு பெண்களும் வயதுக்கு வந்த மேஜர்களாகும்.
2. அவ்விரு பெண்களும் தாங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் மதம் மாறி, முஸ்லிம் இளைஞர்களைத் திருமணம் புரிந்ததாக நீதிமன்றத்திலேயே வாக்குமூலம் கொடுத்துள்ளதோடு தங்கள் கணவர்களுக்கு எதிராகத் தங்களிடம் எவ்விதப் புகாரும் இல்லை என்றும் மறுத்திருக்கின்றனர்.
இவ்வளவு தெளிவாக வழக்கு தொடுக்கப்பட்ட இளைஞர்களுக்குச் சாதமாக வழக்கில் வாதிகளாகச் சேர்க்கப்பட்டவர்களே கூறிய பின்னரும் அவர்கள் மீதான வழக்கு, பொய் வழக்கு என அப்பட்டமாக தெரிந்த பின்னரும் வழக்கைத் தள்ளுபடி செய்யாததோடு, முன் ஜாமீனும் வழங்காமல் வழக்கை மாற்றி வைத்து சட்டத்தை மீறியுள்ளது கேரள உயர் நீதிமன்றம்.
அத்தோடு நின்றிருந்தால் கூட, முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக எப்போதும் போல் அரசு நிர்வாகங்கள் செயல்படுவது தானே என முஸ்லிம் சமுதாயம் சமாதானமடைந்திருக்கும். ஆனால், அனைவருக்கும் சமமான நீதி, நியாயத்தை வழங்க வேண்டிய பாரபட்சமற்ற நீதித்துறை கூறிய கருத்துகளும் அரசுக்கு நீதித்துறை தானே முன்வந்து வழங்கிய உத்தரவும் மீண்டுமொரு "நான் குதிருக்குள் இல்லை" என்ற வேஷத்தை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒரு பெண், கேரள மாநிலக் காவல்துறை ஐ.ஜி ரேங்கில் உள்ள ஓர் அதிகாரியின் நெருங்கிய உறவினராவார். மற்றொரு பெண், திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்பெஷல் ப்ராஞ்ச் அலுவலகத்தில் பணி புரியும் ஓர் அதிகாரி மற்றும் கேரள மாநில பாஜக மாநிலத் தலைவர் ஆகியோரின் குடும்பத்தவராவார். இவர்களின் நெருக்குதலிலேயே இவ்விரு இளைஞர்களுக்கு எதிராக பொய் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதும் நீதிதுறையினுள் புகுந்துள்ள கறுப்பு ஆடும் தலையாட்டி இருப்பதும் இதிலிருந்து வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
முஸ்லிம்களைச் சமூகத்தின் முன்னிலையில் குற்றவாளி கூண்டில் நிறுத்தும் தீராத ஆசையில், சங்கபரிவாரம் உருவாக்கிய ஒரு வாசகத்தை அதே வடிவில் பயன்படுத்திய கேரள உயர்நீதி மன்றத்தில் அமர்ந்திருக்கும் நீதிபதி கெ.டி. சங்கரன், தன் வருகையின் ஆரம்ப இடம் எது என்பதைத் தெளிவாக வெளிச்சமிட்டு காட்டியுள்ளார். "மதமாற்றம் நடத்துவதற்காக பள்ளி-கல்லூரி கேம்பஸ்களை மையமாக்கி லவ் ஜிஹாத் என்ற இயக்கம் செயல்படுவதாக" நீண்டகாலமாக சங்கபரிவார அமைப்புகள் நடத்திய பிரச்சாரத்தில் பயன்படுத்திய அதே வாசகத்தை எவ்விதத் தயக்கமும் இன்றி அப்படியே எடுத்தாண்டு, இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க காவல்துறை டி.ஜி.பிக்கு நீதிபதி சங்கரன் உத்தரவிட்டுள்ளார்.
கொள்கையையும் கோட்பாட்டையும் கட்டிக்காக்கவும் அக்கிரமம், அநியாயங்களுக்கு எதிராக நீதி, நியாயத்தைப் பாதுகாத்து அனைத்து மக்களுக்கும் சமநீதியை நிலைநாட்டவும் நடத்தும் பல்வேறு வழியிலான முயற்சிகளுக்கே இஸ்லாத்தில் "ஜிஹாத்" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இறைத்தூதரும் முஸ்லிம் சமுதாயமும் மிகவும் மேன்மையானதாக கருதும் இச்சொல்லைச் சமூகத்தின் முன்னிலையில் மோசமானதாக சித்தரிக்கும் நோக்குடனே சங்கபரிவாரம் இது போன்ற வாசகங்களை உருவாக்குகின்றது.
இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பிரச்சாரம் நடத்துவதற்காகவும் தங்களின் ஹிந்துத்துவ அஜண்டாவைச் செயல்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளை மூடி மறைப்பதற்குமே "லவ் ஜிஹாத்" என்ற வாசகத்தை சங்கபரிவாரம் உருவாக்கி, சமூகத்தில் பரவவிட்டது. சில மாதங்களுக்கு முன்னர், சில சங்கபரிவார அமைப்புகள் இதே வாசகத்தைப் பயன்படுத்தித் துண்டு பிரசுரங்களும் சுவர் விளம்பரங்களும் பிரச்சாரங்களும் நடத்தியிருந்தன.
அநாவசிய விவாதங்களை உருவாக்க வேண்டாம் என நினைத்தோ என்னமோ முஸ்லிம்களிடமிருந்து சங்கபரிவாரத்தின் இச்சொல் பிரயோகத்துக்கு எதிராக எவ்வித எதிர்ப்புகளும் அச்சமயங்களில் எழவில்லை. அல்லது சங்கபரிவாரத்தின் எப்போதும் போலான கடைசரக்கு என சமுதாயம் அதனைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், எல்லா மக்களுக்கும் சமநீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டிய நீதித்துறை, சங்கபரிவாரம் உருவாக்கிய அதே வாசகத்தைப் பயன்படுத்தி முஸ்லிம் சமுதாயத்தினை அவமானப்படுத்த முயன்றது முஸ்லிம்களுக்கு இடையில் மிகக் கடுமையான எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது.
இதற்கிடையில் "லவ் ஜிஹாத் அமைப்புக்கும் பாப்புலர் ஃப்ரண்டிற்கும் இடையிலுள்ள தொடர்பைக் குறித்து விசாரிக்க நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவைக் குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினரிடம் கருத்து கேட்டபோது, அவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக கருத்துக் கூறியுள்ளனர் (விரிவாகப் பெட்டிச் செய்தியில்).
மடியில் கனமுள்ளவர்களுக்கே வழியில் பயமிருக்கும்! லாவ்லின் ஊழல் வழக்கில் கேரள கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிணராய் விஜயன் சேர்க்கப்பட்டபோது, அதனை எதிர்த்து, கேரளத்தைக் கம்யூனிஸ்ட் கட்சியினர் அல்லோகல்லோலப் படுத்தினர். சிபிஐக்கு எதிராகத் தரக்குறைவான வார்த்தைகளால் அர்ச்சிக்கவும் அவர்கள் தவறவில்லை. அதே போன்றே சில சங்கபரிவார அமைப்புகள் மீதும் காஞ்சி மடாதிபதி காமகோடி மீதும் வழக்குகள் தொடரப்பட்ட வேளைகளில், அவ்விசாரணைகளைத் தடுத்து நிறுத்தவும் அவ்வழக்குகளை விசாரித்த அதிகாரிகளுக்குக் கொலைமிரட்டல்கள் வரை விடுக்கப்பட்டதும் நாடறிந்ததாகும். இவ்வகையான தேசப்பற்றை(!) இவர்கள் வெளிப்படுத்தும் அதே வேளையில், பயங்கரவாதம் தீவிரவாதம் என மக்களைப் பயமுறுத்தும் சொற்களால் மக்களிடையே சங்கபரிவாரத்தாலும் அரசு இயந்திரங்களாலும் ஊடகங்களாலும் அறிமுகப்படுத்தப்படும் இது போன்ற இஸ்லாமிய இயக்கங்கள் தங்கள் மீது விசாரணை என அறிவிக்கப்பட்டால் முழு ஒத்துழைப்பு நல்கி தங்கள் தேசவிரோத(!) செயல்பாட்டைத் தெளிவித்து வருவது வியப்பளிக்கக் கூடியதாகும்!
ஜிஹாத் என்ற பரிசுத்தமான சொல்லுடன் லவ்(காதல்) என்ற சொல்லைச் சேர்த்து, ஆபாசப்படுத்த சங்கபரிவாரம் முயன்றது என்றால், ஆர்.எஸ்.எஸ்ஸை விட ஒரு படி மேலாக நீதித்துறை "லவ் ஜிஹாத்" என்பதுடன் "ரோமியோ ஜிஹாத்" என்ற புதிய ஒரு நையாண்டி வாசகத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக சங்கபரிவாரம் ஒரு படி குதித்தால் அதனை விட இரண்டு மடங்கு குதிக்க தாங்கள் ரெடி என இந்திய நீதித்துறை செயலால் வெளிப்படுத்தியுள்ளது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளக் கல்லூரி காம்பஸ்களில் முஸ்லிமல்லாத பெண்கள் இஸ்லாம் அல்லாத வேறு மதங்களில் உள்ள இளைஞர்களை விரும்பி திருமணம் புரிவது சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகளாகும். இருப்பினும் இதுநாள் வரை இது ஒரு சமூகப் பிரச்சனையாக நீதிமன்றங்களிலோ அரசியல்வாதிகளிடமோ விவாதப்பொருளாகி இருக்கவில்லை. அதே சமயம், அப்பெண்கள் இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை மார்க்கமாக தேர்வு செய்த உடன், மிகப் பெரிய சமூகப்பிரச்சனையாக அது ஊதிப் பெரிதாக்கப் பட்டுள்ளது.
அத்தோடு நீதிமன்றமே பிரபலமான ஒரு முஸ்லிம் அமைப்பின் பெயர் எடுத்துக் கூறி, அதனை மோசமானதாக சித்தரிக்க முயன்றிருப்பதும் இயல்பான ஒன்றல்ல.
"லவ் ஜிஹாத்" எனும் இல்லாத ஓர் இயக்கத்தை - சங்கபரிவாரம் உருவாக்கி விட்ட கற்பனைப் பெயரை, தற்போது அகில இந்திய அளவில் அரசியலிலும் இறங்க தீர்மானித்துள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய சமுதாய அமைப்போடு தொடர்பு படுத்தி, நீதித்துறை இழுத்து விட்டிருப்பது திட்டமிட்ட சங்கபரிவாரத்தின் சதிச்செயல் என்ற சந்தேகத்தை முஸ்லிம் சமுதாய மக்களிடையே அதிக அளவில் கிளப்பியுள்ளது (முஸ்லிம் சமுதாயத் தலைவர்களின் கண்டனங்களைப் பெட்டிச் செய்திகளில் காண்க).
நீதிமன்றத்தின் இந்த அடாவடித்தனமான முஸ்லிம் சமுதாயத்தின் மீது சுமத்தியுள்ள அநீதமான கருத்துருவாக்கப் பின்னணியினைக் குறித்து ஆராய்ந்தால், மேலும் அதிர்ச்சி அதிகமாகின்றது!.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு, கேரளத்திலிருந்து இயங்கிய என்.டி.எஃப், தமிழகத்திலிருந்து இயங்கிய மனித நீதிப் பாசறை, கர்நாடகத்திலிருந்து இயங்கிய கே.எஃப்.டி என்ற கர்நாடகா ஃபெர்ட்டனிட்டி ஃபாரம் ஆகிய மூன்று அமைப்புகள் இணைந்து தென்னிந்திய அளவில் உருவாக்கிய முஸ்லிம் சமுதாயத்துக்கான சமூகநீதியை நிலைநாட்ட ஏற்படுத்தப்பட்ட கூட்டு அமைப்பாகும். பின்னர், அரசியலில் களமிறங்கத் திட்டமிட்ட இந்த அமைப்பு, சில மாதங்களுக்கு முன் கோழிக்கோட்டில் நடத்திய பிரமாண்ட பேரணியிலும் மாநாட்டிலும் மேலும் சில வட இந்திய மாநிலங்களில் இயங்கும் முஸ்லிம் அமைப்புகளும் இணைந்து கொண்டன.
இவ்வாறு மிகத் தெளிவாக முஸ்லிம் சமுதாயத்திற்கான சமூக நீதியைப் பெறும் நோக்கில் திட்டமிட்டு கட்டமைக்கப்படும் இந்த அமைப்பு, பெண்கள் அமைப்பு, கேம்பஸ்களில் மாணவர் அமைப்பு எனப் பல நிலைகளிலும் தங்களின் செயல்பாட்டைச் சிறிது சிறிதாக விரிவுபடுத்தி வருகிறது.
இந்நிலையிலேயே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் அதன் பெண்கள் பிரிவுத் தலைவியும் இந்த லவ், ரோமியோ விவகாரத்தோடு இணைக்கப் பட்டு, கேரள உயர் நீதிமன்றத்தால் வரம்பு மீறி அநீதமான முறையில் விமர்சிக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரம், முஸ்லிம் சமுதாயத்தின் மீதான சங்கபரிவாரத்தின் திட்டமிட்டத் தாக்குதல்களிலிருந்து முஸ்லிம்களைப் பாதுகாக்கும் நோக்கில் செயல்படும் இந்த அமைப்பை அழித்தொழிக்க, சங்கபரிவாரம் பலகாலமாகப் பல பொய்ச் செய்திகளை இந்த அமைப்பின் மீது பரப்பி வருவது அனைவரும் அறிந்த விஷயமாகும்.
தாங்கள் செய்யும் பல நிழலான செயல்களை முஸ்லிம்கள் மீதும் இஸ்லாமிய அமைப்புகளின் மீதும் சுமத்தி, முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் பயங்கரவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சித்தரிப்பதில் சங்கபரிவாரம் மிகப் பெரிய வெற்றியை இந்தியாவில் அடைந்துள்ளதை அனைவரும் நினைவில் இருத்த வேண்டும்.
அவற்றில் சில பயங்கரவாதச் செயல்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் அவை மழுங்கடிக்கப்பட்டு, அவற்றில் தொடர்புடையவர்களாக பின்னர் கைது செய்யப்பட்ட சங்கபரிவார பிரதிநிதிகள் தண்டனையிலிருந்தும் மக்களின் கவனத்திலிருந்தும் திசை திருப்பப்பட்டு பாதுகாப்பாக நாட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
இதற்கு உதாரணமாக, தென்காசியில் இந்து முன்னணி அமைப்பு நிர்வாகிகளே தங்களது சொந்த அலுவலகத்துக்குக் குண்டு வைத்து விட்டு அதனை முஸ்லிம்கள் மீது கட்டிவைக்க முயன்றதும் பின்னர் உண்மை வெளிப்பட்டுபோய் கேவலப் பட்டு நின்றதும் நாடறிந்த உண்மை. ஆனால், அந்த வழக்கு ஊடகங்களில் ஆரம்பத்தில் முஸ்லிம்கள் செய்ததாக வெளியான போது இடம் பிடித்ததைப் போன்ற முக்கியத்துவம் உண்மையான சங்கபரிவார ஏஜண்டுகள் கைது செய்யப்பட்டபோது முக்கியத்துவம் கொடுக்கப்படாததோடு, அவ்வழக்கே தேய்ந்து, இன்று அவ்வழக்கு நடைபெறுகிறதா? என்பதே தெரியாத நிலையில் உள்ளது.
அதே போன்று மாலேகானில் சிமி அலுவலகம் முன்னிலையில் குண்டு வைத்த, இந்துத்துவ தீவிரவாதிசாமியாரிணி ப்ரக்யா சிங், அந்தக் "குண்டுவெடிப்புக்குக் காரணம் சிமிதான்" என்ற தோற்றத்தை ஏற்படுத்தி, ஊடகங்களும் காவல்துறையும் முஸ்லிம்களை வாட்டி எடுத்தன. பின்னர் நடுநிலையாகச் செயல்பட்ட காவலர்கார்கரேயின் உதவியால் உண்மை வெளியான பின்னர், சங்கபரிவாரத்தின் தீவிரவாதத்தைக் குறித்து இன்று வாய் திறப்பார் யாருமின்றி, தீவிரவாதி ப்ரக்யா சிங் உல்லாசமாக இருந்து வருகிறார்.
அதே போன்று குஜராத்தில் நரவேட்டை மன்னன் மோடி தலைமையில் அப்பட்டமாக எரித்தும் வெட்டியும் சுட்டும் 3000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் கொன்றொழித்து விட்டு அதற்குக் காரணம் அதற்கு முன்னர் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமே காரணம் என்றும் அதனைச் செய்தவர்கள் முஸ்லிம்கள் தான் என்றும் வகையாகப் பொய் வியாக்கியானம்சங்கபரிவாரத்தால் அவிழ்த்து விடப்பட்டது. இன்று குஜராத்தில் நரவேட்டையாடிய கும்பல் அரசுப் பாதுகாப்புடன் சுகமாகச் சுற்றி வருகிறது.
இவ்வாறு தாங்கள் செய்யும் செயலை முஸ்லிம்கள் தலையில் கட்டி வைப்பதிலும் தாங்கள் செய்யும் படுபாதகச் செயல்கள் வெளியே வராமலிருக்க பொய்த் தகவல்களை முஸ்லிம்கள் மீதும் முஸ்லிம் அமைப்புகள் மீதும் பரப்பி முஸ்லிம் சமுதாயத்தின் மீதே ஊடகம், காவல்துறை, நீதித்துறை, உளவுத்துறை, மக்கள் என அனைவரின் கவனமும் பார்வையும் இருக்கும் விதத்தில் பார்த்துக் கொள்வதும் அதன் மறைவில் தாங்கள் செய்யும் அராஜக, அட்டூழியங்களை எவருடைய கவனத்தையும் ஈர்க்கா வண்ணம் செய்து முடிப்பதிலும் சங்கபரிவாரம் மிகத் திறமையாக செயல்பட்டு வருவது கண்கூடு.
சங்கபரிவாரத்தின் முந்தைய பல சதிச் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டால், பத்தனம் திட்டை கல்லூரி நிகழ்விலும் அதே போன்றதொரு திட்டமிட்ட சதியே நடந்துள்ளது என்ற சந்தேகம் உறுதிப் படுகிறது.
சங்கபரிவாரத்தின் ஒரு சிறப்புப் பிரிவாக, "முஸ்லிம் பெண்களைக் காதல் என்ற பெயரில் மயக்கிச் சீரழித்து, அவர்களை இந்து மதத்துக்கு மாற்றுவதற்கும் அல்லது குறைந்தபட்சம் முஸ்லிம் பெண்களின் வயிற்றில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் இந்துவாகப் பிறக்க வைப்பதற்கும்" நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு ரோமியோ இளைஞர் பட்டாளம் அளவுக்கதிகமாக வாரி இறைக்கப்பட்ட பணபலத்துடன் இயங்கி வருவதாக பல்வேறு முஸ்லிம் அமைப்புகளால் சங்கபரிவாரின் சுற்றறிக்கைச் சான்றோடு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகாத நடவடிக்கையை மக்கள் மத்தியிலிருந்து திசை திருப்ப வேண்டுமெனில், அல்லது குறைந்த பட்சம் இந்துக்களிடையே அதன் இத்தகைய கேடுகெட்ட செயலுக்கு நியாயம் கற்பிக்க வேண்டுமெனில் அதற்கு ஒரு முஸ்லிம் அமைப்பு பலிகடாவாக்கப்பட வேண்டியது கட்டாயமாகும் என்பது சங்கபரிவாரத்தின் திட்டமாகும்.
எவ்வாறு சங்கபரிவாரத்தின் திட்டமிட்ட தீவிரவாதச் செயல்களுக்கு முஸ்லிம் அமைப்புகள் பலிகடாவக்கப்படுகிறதோ அதே போன்று அதன் இத்தகைய கேடு கெட்ட, கீழ்தரமான செயல்பாட்டிற்கும் ஒரு முஸ்லிம் அமைப்பு பலிகடாவாக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். அதற்காக சங்கபரிவாரத்தால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை அமைப்பே இந்த லவ் ஜிஹாத் அமைப்பாகும். அதனுடன் ஒரு கல்லில் பல மாங்காய் என்பது போல், தங்களுக்குக் கேரளாவில் மட்டுமின்றி இந்திய அளவில் சிம்ம சொப்பனமாக வளர்ந்து வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பையும் சிமியைப் போன்று இல்லாமல் அழித்தொழிக்கும் நோக்குடன், பாரபட்சமில்லாமல் செயல்பட வேண்டிய நீதித்துறையில் கறுப்பு ஆடுகளைப் புகுத்தித் தங்கள் திட்டத்தைச் செயல்படுத்துவற்குப் பயன் படுத்திக் கொள்ள முயன்று வெற்றியும் பெற்று விட்டதாகத் தோன்றுகிறது. ஆனால் அது தற்காலிக வெற்றியா? நிரந்தர வெற்றியா? என்பது போகப் போகப் புரியும்.
எது எப்படி இருந்தாலும் முஸ்லிம்களின் ஒரே நம்பிக்கையான நாட்டு மக்கள் அனைவருக்கும் சமநீதியை எவ்விதப் பாரபட்சமும் இல்லாமல் வழங்க வேண்டிய நீதித்துறையும் சிறிது சிறிதாக இவ்வாறு களங்கம் அடைந்து வருவது நல்ல அறிகுறியல்ல.
அரசின் எல்லாத் துறைகளிலும் சங்கபரிவார வெறியர்கள் புகுந்துள்ளனர் என்பது நாடறிந்த உண்மை தான். ஆனால், அது நீதித்துறை முழுவதும் புகுந்து செல்லரித்து அழிக்குமானால், கதி கெட்டு அழிவின் விளிம்புக்குச் செல்லும் சமுதாயத்தின் கோபக்கனல் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைக் கூற இயலாது! அதனை உணர்ந்து ஆரம்பத்திலேயே நீதித்துறையைத் தூய்மைபடுத்துவது மத்திய-மாநில அரசுகளின் கடமையாகும்!
நன்றி: சத்தியமார்க்கம்Read more: http://kointha.blogspot.com/2009/10/blog-post_13.html#ixzz0TswYGV8fRead more: http://kointha.blogspot.com/2009/10/blog-post_13.html#ixzz0TswYGV8f